ஆன்மிகம்
ஒரு ஆண்டுக்கு பிறகு நடந்த சோலைமலை முருகன் கோவிலில் தங்க தேரோட்டம்

ஒரு ஆண்டுக்கு பிறகு நடந்த சோலைமலை முருகன் கோவிலில் தங்க தேரோட்டம்

Published On 2021-02-18 07:40 GMT   |   Update On 2021-02-18 07:40 GMT
ஒரு வருடத்துக்கு பிறகு சோலைமலை முருகன் கோவிலில், மேள தாளம் முழங்க தங்க தேரோட்டம் நடந்தது. வழக்கம் போல் பக்தர்கள் அதற்குரிய காணிக்கையை செலுத்தி விட்டு தங்க தேரோட்டம் நடத்தி கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரையை அடுத்த அழகர்கோவில் அழகர்மலை உச்சியில் உள்ளது பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவில்.

கொரோனா ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில் இக்கோவிலில் தொடர்ந்து பூஜை முறைகள், நெய் விளக்கு ஏற்றுவது மற்றும் தேங்காய், பழம், மாலைகள் வைத்து சாமி தரிசனம் செய்வதற்கு அரசு அனுமதித்தது. இதைத் தொடர்ந்து இங்கு தங்க தேரோட்டம் நடைபெற அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை பரிசீலித்த அறநிலையத் துறை தங்க தேரோட்டம் நடைபெற அனுமதி அளித்தது.

இதனைத் தொடர்ந்து ஒரு வருடத்துக்கு பிறகு நேற்று மாலை முதல் சோலைமலை முருகன் கோவிலில், மேள தாளம் முழங்க தங்க தேரோட்டம் நடந்தது. இதையொட்டி சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

முன்னதாக தக்கார் வெங்கடாசலம், உபயதாரர் சுப்பையா செட்டியார் மற்றும் பக்தர்கள் தங்க தேரை கோவில் பிரகாரத்தை சுற்றி இழுத்து வந்து தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். வழக்கம் போல் பக்தர்கள் அதற்குரிய காணிக்கையை செலுத்தி விட்டு தங்க தேரோட்டம் நடத்தி கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News