செய்திகள்
நாகை அரசு மருத்துவமனையில் அப்துல்லா கான், ஜாகிர் உசேன் ஆகியோர் சிகிச்சை பெற்றதை படத்தில் காணலாம்.

மது குடித்ததை தட்டிக்கேட்டதால் ஓட்டலை சூறையாடி உரிமையாளர் உள்பட 2 பேர் மீது தாக்குதல்

Published On 2021-01-10 14:38 GMT   |   Update On 2021-01-10 14:38 GMT
நாகையில் மது குடித்ததை தட்டிக்கேட்டதால் ஓட்டலை சூறையாடி விட்டு உரிமையாளர் உள்பட 2 பேரை தாக்கிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:

நாகை செம்மரக்கடை தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன்(வயது 52). இவர், தோணித்துறை சாலையில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் ஓட்டலை மூடும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.அப்போது அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த நிவாஸ்(26) என்பவர், தனது நண்பருடன் ஓட்டலுக்கு சாப்பிட வந்துள்ளார். அப்போது அங்கு வைத்து அவர்கள் மது குடித்தனர். பின்னர் அவர்கள் ஆம்லெட் தரும்படி கேட்டுள்ளனர்.

அதற்கு ஜாகிர் உசேன், ஓட்டலில் எல்லாம் முடிந்து விட்டது. வியாபாரம் நடக்கும் இடத்தில் வைத்து மது குடிக்கலாமா? என்்று கேட்டுள்ளார். இதில் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்து சென்ற நிவாஸ் தனது நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு வந்து ஓட்டலில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பின்னர் ஜாகிர் உசேன மற்றும், ஓட்டல் கணக்காளர் அப்துல்லா கான் ஆகிய 2 பேரையும் கட்டையாலும், பாட்டிலாலும் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிவாஸ் மற்றும் அவர்கள் நண்பர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். மது குடித்ததை தட்டி கேட்டவரை தாக்கி, ஓட்டலை அடித்து நொறுக்கும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பாதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News