ஆன்மிகம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருக்கார்த்திகை அன்று அம்மன் வீதிஉலா ரத்து
பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக அம்மன் வீதி உலா ரத்து செய்யப்பட்டுள்ளது.
சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபத்திருநாள் வெகு விமரிசையாக நடைபெறும். அன்று அபிஷேகம் முடிந்ததும், அம்மன் மரக்கேடயத்தில் எழுந்தருளி, சுடலைமரத்தில் தீபம் ஏற்றி, வீதிஉலா வந்து அருள்பாலிப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக அம்மன் வீதி உலா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு திருக்கார்த்திகையை முன்னிட்டு வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) கோவில் பிரகாரத்தில் மாலை பரணி தீபம் ஏற்றப்படும். மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அம்மன் அபிஷேகம் முடிந்து கோவில் கொடிமரம் முன் கேடயத்தில் எழுந்தருளுவார். அதைத்தொடர்ந்து ராஜகோபுரத்தின் முன்புறம் பனை ஓலைகளை மட்டும் சுடலை தீபமாக ஏற்றி கோவில் உள்பிரகாரத்தை உற்சவர் அம்மன் வலம் வந்து ஆஸ்தான மண்டபத்தை சென்றடைகிறார். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. இதேபோல், சமயபுரம் மாரியம்மன் கோவில் கட்டுப்பாட்டிலுள்ள போஜீஸ்வரர் கோவில், உஜ்ஜயினி ஓம்காளிஅம்மன் கோவில், முக்தீஸ்வரர் கோவில், செல்லாண்டிஅம்மன் கோவில்களிலும் இதே நடைமுறை பின்பற்றப்படும் என்று சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.