செய்திகள்
பல்லடத்தில் சிதலமடைந்த சாலையால் சிக்கி தவிக்கும் ஆம்புலன்ஸ்கள்
கடந்த 2020 - ம் ஆண்டில் மட்டும் சுமார் 600-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டு சுமார் 30-க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
பல்லடம்:
பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. நகரின் மையப்பகுதியில் காவல் துறை அலுவலகங்கள், அரசு மருத்துவமனை, வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ள பகுதியில் தேசிய நெடுஞ்சாலை செல்வதால் எப்போதும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால் பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. விபத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் சுமார் 600க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டு சுமார் 30க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து நெரிசலால் உயிருக்குப் போராடும் நோயாளிகளை ஏற்றிவரும் ஆம்புலன்ஸ்களும் சிக்கித் தவிக்கின்றன.
இதனால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்வதற்காக போக்குவரத்து போலீசார் தடுப்புகளை வைத்து ரோட்டின் ஓரத்தில் தனியாக வழி ஏற்படுத்தி உள்ளனர். ஆனால் அந்த ரோடு குண்டும், குழியுமாக இருப்பதால் அந்த ரோட்டை கடக்க ஆம்புலன்ஸ் வாகனங்கள் மிகவும் சிரமப்படுகின்றது.
எனவே அந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.