ஆன்மிகம்
சபரிமலை 18 படி பூஜை

சபரிமலை 18 படிகளின் புராணங்கள்

Published On 2021-11-30 06:05 GMT   |   Update On 2021-11-30 09:05 GMT
இந்தப் பிரசித்தி பெற்ற பூஜையை நிகழ்த்த, சபரிமலை கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பணம் கட்டிவிட்டால் மற்ற ஏற்பாடுகளை தேவஸம் போர்டு செய்து கொள்ளும்.
சபரிமலை ஸ்ரீதர்மசாஸ்தா கோவிலின் சிறப்பானதும் தலைமயானதுமான பூஜை, பதினெட்டாம் படி பூஜை தான், அதிகம் செலவு ஆகும் பூஜையும் இதுதான். மிகவும் புனிதமாக கருதப்படும் இந்த பூஜை, வேறு எந்த கோவில்களிலும் இல்லாத ஒன்று. பதினெட்டு படிகளில் ஒவ்வொன்றிற்கும் ஒரு புராணம் என்று 18 புராணங்கள் உண்டு என்பது ஐதீகம். ஒவ்வொரு படியையும் ஒரு மலை தெய்வம் என்று சங்கல்பித்து படி பூஜை நடத்தப்படுகிறது.

1. சபரி மலை, 2. பொன்னம்பல மேடு, 3. கவுண்ட மலை, 4. நாக மலை, 5. சுந்தர மலை, 6. சிற்றம்பல மேடு, 7. கல்கி மலை, 8. மாதங்க மலை, 9. மைலாடும் மலை, 10. ஸ்ரீ மாத மலை, 11. தேவர் மலை, 12. நீலக்கல் மலை, 13. தலப்பாறை மலை, 14. நீலி மலை, 15. கரி மலை, 16.  புதுச்சேரி, 17. அப்பாச்சி மேடு, 18. இஞ்சிப் பாறை என்னும் பதினெட்டு மலைகளின் தெய்வங்களை சாந்திபடுத்தவே பதினெட்டுப்படி பூஜை நடத்தப்படுகிறது.

சபரிமலையில் இரவு அத்தாழ பூஜைக்கு முன்பு பதினெட்டாம்படி பூஜை நடக்கும். விசேஷமுள்ள இந்த பிரதான பூஜையை, சபரிமலை ஐயப்பன் கோவில் தலைமைப் புரோகிதர் மட்டுமே செய்ய வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்பட்ட பதினெட்டுப்படி பூஜைக்கு பக்தர்களிடமிருந்து பேராதரவு பெருகியதால் பதினெட்டுப்படி பூஜை நடத்தப்படும் நாட்கள் அதிகரிக்கப்பட்டன.

ஐயப்ப பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வரும் நாட்களில் பதினெட்டும்படி பூஜை நடத்த மாட்டார்கள். தற்சமயம் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் பதினெட்டுப்படி பூஜை நடத்தப்படுகிறது.

இந்தப் பிரசித்தி பெற்ற பூஜையை நிகழ்த்த, சபரிமலை கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பணம் கட்டிவிட்டால் மற்ற ஏற்பாடுகளை தேவஸம் போர்டு செய்து கொள்ளும். கலசத் துணிகள், படி பூஜையின்போது தலைமை புரோகிதர் அணிய வேண்டிய உடைகள், கற்பூரம், சாம்பிராணி, 18 தேங்காய்கள் உதிரிப் பூக்கள், பூமாலைகள், 36 நிலை விளக்குகள் இவைகள் பூஜைக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்கள்.

இந்தப்படி பூஜை நடத்தி முடிய சுமார் மூன்றுமணி நேரம் ஆகும். ஐந்து அடி நீளமும், ஒன்பது அடி அகலமும் உள்ள பஞ்சலோகத் தகடு அடிக்கப்பட்ட படிகளின் நடுவில் பட்டுத்துணி விரித்து பூக்கள் வைக்கப்பட்டு (தாமரைப் பூவும் அடக்கம்) பூக்களின் மேல் தேங்காய் ஒன்றும் வைக்கப்படும். ஒவ்வொரு படிகளின் இரு புறத்திலும் இரண்டு நிலை விளக்குகளின் திரி கொளுத்தி வைப்பார்கள். பூக்கள், பூமாலைகளைக் கொண்டு பதினெட்டுப்படிகளும் அதன் பக்க சுவர்களும் அலங்கரிக்கப்படும்.

பதினெட்டுப் படிகளில் கீழாக இருக்கும் முதல் படியின் கீழே தளத்தில் அமர்த்து சபரிமலை சந்நிதானத்தை நோக்கியவாறு பதினெட்டுப்படி பூஜைகளை தலைமை புரோகிதர் நிர்வகிப்பார். ஒவ்வொரு படியிலும் பிரத்யேக பூஜை நடத்தப்படும். பூஜை நடக்கும் போது நடை திறந்திருக்கும். படி பூஜை நிறைவுற்று, அத்தாழ பூஜையும் நடத்தி முடிந்த பிறகு தான் நடை அடைக்கப்படும்.

பதினெட்டுப்படி பூஜையை அதிக அளவில் நடத்துபவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா ஐயப்ப பக்தர்கள் தான்.
Tags:    

Similar News