ஆன்மிகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

Published On 2020-09-01 04:40 GMT   |   Update On 2020-09-01 04:40 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள் அமர தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியதால் கடந்த மார்ச் மாதம் முதல் முக்கிய கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதைத்தொடர்ந்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலும் மூடப்பட்டது. ஆனால் தினமும் பூஜைகள் நடைபெற்று வந்தன. பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை 6.30 மணியில் இருந்து பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்து வந்தனர். இன்று காலை கோவில் திறக்கப்படுவதை தொடர்ந்து நேற்று கோவிலில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

இன்று காலை பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 6 மாதங்களுக்கு பிறகு கோவிலில் சாமி தரிசனம் செய்வதால் பக்தர்கள் பக்தி பரசவம் அடைந்தனர்.

மேலும் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மூலவரை தரிசனம் செய்து பின்னர் அம்மன் சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே அனுப்பப்பட்டனர். இதற்கான கூண்டுகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. கோவில் வளாகத்தில் அமர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவில் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் முககவசம் அணிந்திருக்க வேண்டும். பக்தர்கள் கைகளைச் சுத்தம் செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். சமூக இடைவெளியை பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டும். அதற்காக கோவிலில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் வட்டம் போடப்பட்டுள்ளது. கோவிலில் நடைபெறும் பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. இதுதவிர தமிழக அரசு தெரிவிக்கும் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும்.
Tags:    

Similar News