கல்லூரி மாணவி கற்பழிப்பு - வீடியோ எடுத்து மிரட்டிய காதலன்
கோவை:
கோவை பீளமேட்டை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த ஜனவரி மாதம் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக போத்தனூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் வினோத்குமார் (வயது 25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் அடிக்கடி செல்போன் மூலமாக பேசி வந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே நெருக்கம் அதிகமாகி காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.
மேலும் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர். கடந்த மார்ச் மாதம் வினோத்குமார் கல்லூரி மாணவியை கட்டாயப்படுத்தி ஓட்டலுக்கு அழைத்து சென்றார். பின்னர் 2 பேரும் அங்கு அறை எடுத்து தங்கினர். அப்போது வினோத்குமார் மாணவிக்கு தெரியாமல் குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்தார். மயக்க மருந்து கலந்து இருப்பது தெரியாமல் குளிர்பானத்தை குடித்த மாணவி சிறிது நேரத்தில் மயங்கினார்.
அப்போது வினோத்குமார் மாணவியை கற்பழித்தார். இதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்து இருந்தார். மயக்கம் தெளிந்த மாணவி என்ன நடந்தது என்பது தெரியாமல் தன்னுடைய வீட்டிற்கு சென்றார்.
பின்னர் மாணவியை நேரில் சந்தித்த வினோத்குமார் தான் எடுத்து வைத்து இருந்த வீடியோவை காண்பித்தார். இதனை பார்த்து மாணவி அதிர்ச்சியடைந்தார்.
வீடியோவை காண்பித்து மாணவியை மிரட்டிய வினோத்குமார் பெற்றோர்களின் அனுமதி பெறாமல் அவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்தார்.இதனை தொடர்ந்து 2 பேரும் அவரவர் வீட்டிற்கு சென்று தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். தன்னுடைய காதலன் தன்னை மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து வீடியோ எடுத்து மிரட்டி திருமணம் செய்ததால் அவருடன் பேசுவதையும், பழகுவதையும் மாணவி தவிர்த்து வந்தார்.
சம்பவத்தன்று மாணவியின் வீட்டிற்கு சென்ற வினோத்குமார் அவரை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார். ஆனால் மாணவி வர மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மாணவியை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது குறித்து கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் மாணவி புகார் செய்தார். புகாரின் பேரில் மாணவியை மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து வீடியோ எடுத்து மிரட்டி திருமணம் செய்த வினோத்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.