செய்திகள்
200 ரன்களுக்கு மேல் அடித்திருந்தால்... இங்கிலாந்து குறையை ஒப்புக்கொண்ட பயிற்சியாளர்
அகமதாபாத்தில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் 200 ரன்களுக்கு மேல் அடித்திருந்தால் போட்டி முடிவு மாறுபட்டதாக இருந்திருக்கும் என இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. ஆடுகளம் முதல் பந்தில் இருந்தே ‘ஸ்கொயராக டர்ன்’ ஆனது. இதனால் பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். இருந்தாலும் பேட்ஸ்மேன்கள் டர்ன் பந்தைவிட நேராக சென்ற பந்தில்தான் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் ஆடுகளம் குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் இந்திய வீரர்கள் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்தது என்றனர்.
இந்த நிலையில் முதன்முறையாக நாங்கள் 200 ரன்கள் அடித்திருந்தால் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும் என இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் ஜீத்தன் பட்டேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘இந்தியா, ஆசியாவில் இதுபோன்ற ஆடுகளத்தை எதிர்பார்க்கலாம். நாங்கள் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இவ்வளவு விரைவாக டர்ன் ஆகும் என எதிபார்க்கவில்லை. விளையாடுவதற்கு சவாலாக ஆடுகளம்.
முதல் இன்னிங்சில் டாஸ் வென்று 112 ரன்கள் அடித்தால் எந்த ஆடுகளத்திலும் போதுமான ஸ்கோராக இருக்காது. அது ஸ்பின், பிளாட் அல்லது வேகபந்து வீச்சு ஆடுகளமாக இருந்தாலும் கூட. நாங்கள் இந்தியாவை 140 ரன்னுக்குள் சுருட்டியதால் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், மீண்டும் 2-வது இன்னிங்ஸ் எங்களுக்கு கிளிக் ஆகவில்லை’’ என்றார்.