செய்திகள்
பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா தண்ணீர்

பூண்டி ஏரிக்கு மீண்டும் கிருஷ்ணா தண்ணீர் அதிகரிப்பு

Published On 2020-03-09 06:58 GMT   |   Update On 2020-03-09 06:58 GMT
கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி.

கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கடந்த செப்டம்பர் 28-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கண்டலேறு அணையில் அதிகபட்சமாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு அதிகபடியாக 801 கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்தது.

கண்டலேறு அணையின் முழு கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும். தற்போது அணையில் 30 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைந்து வருவதை கருத்தில் கொண்டு பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு வெறும் 120 கனஅடி தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி ஆகியோர் கடந்த 4-ந் தேதி ஆந்திர முதல் அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்தனர்.

அப்போது கண்டலேறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எழுதிய கடிதத்தை அளித்தனர்.

இதனை ஏற்று கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கூடுதலாக 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடுவதாக ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன்ரெட்டி உறுதி அளித்தார். அதன்படி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து 153 கனஅடியாக இருந்தது. இது இன்று காலை 348 கனஅடி தண்ணீராக அதிகரித்துள்ளது.

செப்டம்பர் 28-ந் தேதியில் இருந்து இன்று காலை வரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு 6.231 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 28.37 அடியாக பதிவானது. 1390 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு 313 கனஅடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு 10 கனஅடி தண்ணீரும் அனுப்பப்படுகிறது. கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News