கொல்லிமலை அருகே திமுக முன்னாள் எம்.பி.யின் பேரன் குத்திக்கொலை
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ள பேளுக்குறிச்சி மாந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது62). விவசாயி. இவரது மனைவி சுகன்யா(50). இவர்களுக்கு சுரேஷ் என்ற மகனும், சுபி என்ற மகளும் உள்ளனர்.
சுரேஷ் பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார். சுபி திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். ராஜேந்திரனும், சுகன்யாவும் மாந்தோப்பில் தனது தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ராஜேந்திரன் வீட்டுக்கு வெளியே கட்டிலில் அமர்ந்திருந்தார். சுகன்யா வீட்டின் உள்ளே வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு மர்மநபர்கள் சிலர் வந்தனர். கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்த அந்த கும்பல் திடீரென ராஜேந்திரன் மீது பாய்ந்து தாக்கினர்.
கத்தியால் ராஜேந்திரனின் நெஞ்சு மற்றும் கழுத்தில் சரமாரியாக குத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
சத்தம் கேட்டு வெளியில் வந்த சுகன்யா கணவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து கதறி துடித்தார். அதற்குள் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இது தொடர்பாக பேளுக்குறிச்சி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் டாகூர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை செய்தார். சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.
தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். கொலையாளிகளை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு விரைந்தனர். ராஜேந்திரன் கொலைக்கு காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டது.
ராஜேந்திரன் சமீபத்தில் தனக்கு சொந்தமான சொத்தினை விற்றுள்ளார். அதனால் ஏற்பட்ட பணப்பிரச்சினையில் கொல்லப்பட்டாரா? அல்லது பெண் தகராறு காரணம? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ராஜேந்திரன் கொலையில் கூலிப்படைக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி கூலிப்படை கும்பலை சேர்ந்த 4 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
கொலை செய்யப்பட்ட ராஜேந்திரன் தி.மு.க.வின் முதல் ராஜ்யசபா எம்.பி. சோமசுந்தரத்தின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... அமெரிக்காவில் இந்தியர்கள் கிரீன்கார்டு பெற கூடுதலாக பணம் செலுத்த வேண்டுமா?- வருகிறது புதிய சட்டம்