செய்திகள்
கொடைக்கானல் ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி சென்ற சுற்றுலா பயணியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
கொடைக்கானல் ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி சென்ற சுற்றுலா பயணியிடம் 7 பவுன் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல்:
மதுரை காளவாசல் பைபாஸ் சாலையை சேர்ந்தவர் குமார்(வயது 53). இவர், தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். நேற்று முன்தினம் காலை இவரது மகள் சாந்தினி (24) ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி செய்தார். அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் சாந்தினி கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் சங்கிலியை பறித்தனர். இதையடுத்து சாந்தினி திருடன்...திருடன்... என கூச்சல் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர், மோட்டார்சைக்கிளில் தப்பி ஓடியவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார். மேலும் அந்த பகுதியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.