உள்ளூர் செய்திகள்
முக ஸ்டாலின்

இலவச பஸ் பயணத்தால் பெண்களுக்கு மாதந்தோறும் 850 ரூபாய் மிச்சமாகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

Published On 2022-05-07 08:34 GMT   |   Update On 2022-05-07 12:13 GMT
இலவச பஸ் பயணத்தால் ஒவ்வொரு பெண்ணுக்கும் சராசரியாக 600 ரூபாயில் இருந்து 1,200 ரூபாய் வரைக்கும் மிச்சம் ஆகிறது. இதுதான் மகத்தான சாதனை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை:

ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, தமிழக சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வாசித்தார். அவர் பேசியதாவது:

ஒரு தனிமனிதனின் வரலாற்றில் வேண்டுமானால் ஓராண்டு என்பது மிக நீண்டதாக இருக்கலாம். ஆனால், ஒரு நாட்டின், மாநிலத்தின் வரலாற்றில் ஓராண்டு என்பது ஒரு துளிதான். துளி போன்ற இந்த ஓராண்டு காலத்தில், கடல் போன்ற விரிந்த சாதனைகளைச் செய்துள்ளோம் என்ற பெருமிதத்தோடு இந்த மாமன்றத்தில் நான் நின்று கொண்டு இருக்கிறேன்.

தமிழ்நாட்டின் எங்கோ ஒரு மூலையில் இருந்து என்னை இந்த மாமன்றத்துக்குள் இத்தகைய தகுதியோடு நிற்க வைத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீரர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தோழமைக் கட்சிகளாக மட்டுமில்லாமல், தோழமை உறவுகளாக எங்களோடு எப்போதும் பயணித்துக் கொண்டிருக்கக்கூடிய கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இவர்களால்தான் நான் இங்கு தலைநிமிர்ந்து நிற்கிறேன். அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை இந்த ஓராண்டு காலத்தில் காத்து வந்திருக்கிறேன் என்று உறுதியாக நான் நம்புகிறேன்.

அனைத்துத் தரப்பு மக்களுடைய நலனைக் காத்து, அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, சமச்சீரான வளர்ச்சியை சாதித்துக் காட்டுவதாக இந்த ஓராண்டுக் கழக ஆட்சி திகழ்கிறது. நமது திட்டங்களின் பயன்கள் சென்று சேராதவரே தமிழ்நாட்டில் இல்லை என்ற ஒரு நிலை உருவாகியுள்ளது.

மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணம் என்ற ஒரு திட்டம் பெண்கள் சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மட்டும் தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும். இப்போதுகூட, இந்தச் சட்டமன்றத்திற்கு வருவதற்கு முன்பு, கோபால புரத்திற்கு, தலைவர் கலைஞருடைய இல்லத்திற்குச் சென்று, அவருடைய திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்துவிட்டு, என்னைப் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு, நானும், நம்முடைய அவை முன்னவரும் மற்றும் அமைச்சர்கள் எல்லாம் காரிலே வந்து கொண்டிருந்தபோது, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையிலே ஒரு பேருந்து நிலையத்திலே இறங்கி நின்றபோது, ஒரு பேருந்து வந்தது. ‘நீங்கள் எல்லாம் காரிலேயே உட்கார்ந்திருங்கள், நான் அந்தப் பேருந்திலே கொஞ்சம் நேரம் பயணம் செய்துவிட்டு வருகிறேன்’ என்று சொல்லி, 29சி அந்தப் பேருந்தில் ஏறினேன். 29சி பேருந்து என்னுடைய வாழ்நாளிலே மறக்கமுடியாத பேருந்து.

ஏனென்றால், பள்ளிப் பருவத்திலே இருந்தபோது, நான் கோபாலபுரத்திலிருந்து 29சி மூலம் பள்ளிக்குச் சென்று வந்தேன். அப்போது தலைவர் கலைஞர், பொதுப் பணித் துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருந்தார். நான் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இருந்து, 29சி பேருந்தைப் பிடித்துத்தான் என்னுடைய பள்ளிக்கு, ஸ்டெர்லிங் சாலையில் இறங்கி, அங்கிருந்து சேத்துப்பட்டிற்கு நடந்து போய், பள்ளிக்குச் சென்று படித்தேன்.

29சி என்ற அந்தப் பேருந்தில்தான் இன்றைக்குக் காலையில் நான் ஏறி பயணித்தேன். அந்தப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த மகளிரிடத்திலே, ‘எப்படி இந்த ஆட்சி நடக்கிறது – ஒரு வருடம் ஆகியிருக்கிறது; இரண்டாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறோம் – உங்களுக்குத் திருப்தியாக இருக்கிறதா?’ என்று கேட்டேன். ‘ரொம்ப திருப்தியாக இருக்கிறது. உங்களைப் பார்த்ததே அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.’ என்று சொன்னார்கள்.

இந்த இலவசப் பயணத்தினால் உங்களுக்கு என்ன லாபம், எவ்வளவு மிச்சமாகிறது? என்ற கேள்விகளையெல்லாம் கேட்டேன். அதற்குரிய விளக்கத்தையெல்லாம் சொன்னார்கள்.

ஏற்கெனவே இதுகுறித்து மூன்று வழித்தடங்களில் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது. கோயம்பேடு முதல் திருவொற்றியூர் வரை; தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை; பிராட்வே முதல் கண்ணகி நகர் வரை பயணம் செய்யக்கூடிய 465 பயனாளிகளிடம் கருத்துக் கேட்கப்பட்டது.

மாநிலத் திட்டக் குழுவால் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கேட்பின் வாயிலாக, இந்தத் திட்டத்தால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலினப் பெண்கள் அதிக அளவிலே பயன்பெற்று வருகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. அதிலும் குறிப்பாகப் பட்டியலினப் பெண்கள் அதிகமாக பயனடைந்திருக்கிறார்கள்.

இந்தச் சலுகை மூலமாக யார், எவ்வளவு பயனடைந்துள்ளார்கள் என்றும் கேட்கப்பட்டது.

வீட்டு வேலை பார்க்கும் ஒரு பெண், மாதத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறுவதாகச் சொன்னார். அரசுப் பேருந்துச் சலுகை வழங்கியதன் காரணமாக தனக்கு மாதம்தோறும் 850 ரூபாய் மிச்சமாகிறது என்று அவர் சொன்னார்.

பொருள்களை விற்பனை செய்யக்கூடிய ஒரு பெண், இந்த மாதம் 9 ஆயிரம் ரூபாய் சம்பாதித்ததாகச் சொன்னார். அரசுப் பேருந்துச் சலுகை வழங்கியதன் காரணமாக இந்த மாதம் 900 ரூபாய் மிச்சமானது என்று சொன்னார். இதுதான் இந்த அரசாங்கத்தினுடைய உண்மையான சாதனை என்று நான் சொல்வேன்.

ஒரு நிறுவனத்தில் பராமரிப்புப் பணியாற்றக்கூடிய ஒரு பெண் மாதம் 9 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறுகிறார். அவருக்கு ஆயிரத்து 70 ரூபாய் மாதம்தோறும் மிச்சம் ஆகிறது. இதுதான் இந்த அரசாங்கத்தினுடைய உண்மையான சாதனையாகும். தினக்கூலித் தொழிலாளியாக ஒரு பெண் இருக்கிறார். அவர் 9 ஆயிரம் ரூபாய் மாத ஊதியம் பெறுகிறார். அவருக்கு மாதம் 750 ரூபாய் மிச்சம் ஆகிறது.

அதாவது ஒவ்வொரு பெண்ணுக்கும் சராசரியாக 600 ரூபாயில் இருந்து 1,200 ரூபாய் வரைக்கும் மிச்சம் ஆகிறது. 30-4-2022 வரை 106 கோடியே 34 லட்சம் பயணங்களை பெண்கள் இலவசமாக மேற்கொண்டுள்ளார்கள். இதுதான் மகத்தான சாதனை.

அவர்கள் வாங்கும் மாத வருமானத்தில் 11 சதவீதம் மிச்சம் ஆகிறது. அன்றாடக் கூலி வேலை பார்ப்பவர்களுக்கு அவர்களது செலவில் 20 சதவீதம் மிச்சம் ஆகியிருக்கிறது. இப்படி மிச்சமாகும் பணத்தைச் சேமித்து வைப்பதாக அந்தப் பெண்கள் சொல்கிறார்கள். அதாவது, அன்றாடச் செலவுக்கு இல்லை என்ற நிலையில் இருக்கக்கூடிய பெண்கள் சேமிக்கக் கூடியவர்களாக ஆகியிருக்கிறார்கள்.

5 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை சம்பாதிக்கக்கூடிய பெண்களுக்கு வாழ்க்கைச் சுமையைக் குறைக்கக்கூடிய திட்டமாக இது அமைந்திருக்கிறது.

ஒரே ஒரு கையெழுத்தின் மூலமாக கோடிக்கணக்கான பெண்களுடைய வாழ்வில் ஒளியேற்ற முடியும் என்பதை நிரூபித்திருக்கும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய திராவிட மாடல் ஆட்சி!

ஒரே ஒரு திட்டத்தைப் பற்றித்தான் நான் சொன்னேன். இப்படி ஒவ்வொன்றைப் பற்றியும் நான் விரிவாகச் சொல்ல முடியும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.


Tags:    

Similar News