செய்திகள்
கோப்புபடம்

அலாஸ்காவில் 8.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

Published On 2021-07-29 07:52 GMT   |   Update On 2021-07-29 11:26 GMT
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அலாஸ்கா தீவுகளில் கடும் சேதம் ஏற்பட்டு இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

அலஸ்கா:

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் கடற்கரையோர பகுதியாகும்.இங்கு பல்வேறு தீவுகள் உள்ளன.

இந்த நிலையில் அலாஸ்காவில் உள்ள தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 8.2 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிலநடுக்கம் கடலில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அமெரிக்காவின் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்த எச்சரிக்கையில், “அலாஸ்கா தீவில் 8.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து வடக்கு மரினா மற்றும் குகம் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


எனவே மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து அதிகாரிகள் உடனே அங்குள்ள மக்களை கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகிறார்கள்.

சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அலாஸ்கா தீவுகளில் கடும் சேதம் ஏற்பட்டு இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஆனால் சேத விவரங்கள் குறித்து உடனடியாக விவரம் தெரியவில்லை.

இதற்கிடையே அலாஸ்காவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக இருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும், ஐரோப்பிய நிலநடுக்க மையம் ரிக்டர் அளவில் 8 ஆக பதிவானதாகவும் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்...3 லட்சம் மாத்திரைகள், 10 ஆயிரம் முக கவசங்களை கொண்டு சாய்பாபாவுக்கு அலங்காரம்

Tags:    

Similar News