செய்திகள்
விபத்து

ஒரகடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்- 2 பேர் பலி

Published On 2020-01-11 06:25 GMT   |   Update On 2020-01-11 06:25 GMT
ஒரகடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

ஒரகடம் அடுத்த பண்ருட்டி அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டினப்பாக்கத்தை சேர்ந்த ரகமத் அப்துல்லா (20), பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த எமிலோசனி(20), அடையாறு பகுதியை சேர்ந்த அர்ஷிதா(20) ஆகியோர் டிப்ளமோ மெக்கானிக்கல் 3-ம் ஆண்டு படித்து வந்தனர்.

இவர்கள் 3 பேரும் நேற்று கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்று விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஒரகடம் மேம்பாலம் அருகே செல்லும்போது பின்னால் வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

இதில் ரகமத் அப்துல்லா, எமிலோசனி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அர்ஷிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஒரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

Similar News