செய்திகள்
சீமான்

நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் விளைவுகள் விபரீதமாகும் - சீமான் அறிக்கை

Published On 2020-09-13 05:49 GMT   |   Update On 2020-09-13 05:49 GMT
நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் விளைவுகள் விபரீதமாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார்.

சென்னை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தங்கை அனிதாவில் தொடங்கி மோதிலால் வரை நீட் எனும் கொலைக்கருவிக்குப் பலியாகும் இளந்தளிர்களின் மரணம் தொடர் கதையாகி வருவது பேரச்சத்தையும், பெருங்கவலையையும் தருகிறது.

2017-ம் ஆண்டு அனிதா, 2018-ம் ஆண்டுப் புதுச்சேரி சிவசங்கரி, விழுப்புரம் பிரதீபா, 2019-ம் ஆண்டு தஞ்சை வைசியா, திருப்பூர் ரிதுஸ்ரீ, விழுப்புரம் மோனிஷா, பெரம்பலூர் கீர்த்தனா, இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நெல்லை தனலெட்சுமி, கோவை சுபஸ்ரீ, இம்மாதம் அரியலூர் விக்னேசு, மதுரை ஜோதிஸ்ரீ, தருமபுரி ஆதித்யா என நீளும் பிஞ்சுப்பிள்ளைகளின் மரணங்கள் பெரும் ரணத்தையும், தாங்கவியலா வேதனையையும் அளிக்கிறது.

‘நீட்’ தேர்வில் தோல்வியுற்ற தற்காகவோ, அதனை எதிர்கொள்ள முடியாததினாலோ உயிரைவிடும் எண்ணத்தைத் எனதருமைத் தம்பி, தங்கைகள் கைவிட வேண்டும். போர்க்குணமும், போராட்ட உணர்வும் மரபணுவிலே நிரம்பப் பெற்றிருக்கிற தமிழ்ப் பேரினத்தின் பிள்ளைகள் ஒருபோதும் நெஞ்சுரத்தையும், துணிவையும் இழக்கக் கூடாது என உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். வாழ்க்கையை எதிர் கொண்டு போராடி, லட்சியத்தில் ஈடேறி வெல்வதற்கு உள்ள உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நீட் தேர்வினால் அடுத் தடுத்து நிகழும் மரணங்கள் அத்தேர்வு முறையின் கோரமுகத்தை அம்பலப்படுத்துகிறது. அத்தேர்வு முறை தொடர இனியும் அனுமதித்தால் தமிழக மாணவர்களை ஒவ்வொருவராய் காவுவாங்கி விடும் பேராபத்து நிறைந்திருக்கிறது. நீட் தேர்வால் இனியொரு உயிரோ, ஒரு மாணவரின் மருத்துவக் கனவோ பறிபோகக்கூடாது என்பதில் இனியேனும் தமிழக அரசு விழிப்புடன் இருக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் ஐவர் அமர்வில் கிடப்பிலிருக்கிற நீட் தேர்வு குறித்தான மறு சீராய்வு வழக்கை விரைந்து விசாரிக்கக்கோரி மனு அளித்து தமிழக அரசு சட்டப் போராட்டம் செய்ய வேண்டும்.

மத்திய அரசிற்கு அரசியல் அழுத்தமும், பெரும் நெருக்கடியும் தந்து நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கினைப் பெற்றுத் தர உடனடி நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் எனவும், மத்திய அரசு அதற்கு ஒப்புதல் தருவதோடு மட்டு மல்லாது நீட் தேர்வையே மொத்தமாய் ரத்து செய்திட ஆணைப் பிறப்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். இதனை செய்ய தவறினால் எதிர் விளைவுகள் விபரீதமாய் இருக்கும் என மத்திய, மாநில அரசுகளை எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News