செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரவுடிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்

தமிழகம் முழுவதும் 450 ரவுடிகள் கைது- 48 மணி நேரம் போலீசார் அதிரடி

Published On 2021-09-24 05:50 GMT   |   Update On 2021-09-25 02:36 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் 103 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விடிய விடிய நடத்தப்பட்ட சோதனையில் 31 அரிவாள்கள் பிடிபட்டுள்ளன.
சென்னை:

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டி.ஜி.பி.சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர ஆணையாளர்கள் ஆகியோர் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் சற்று அதிகரித்தன. இதையடுத்து இதுபோன்ற குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 48 மணிநேரம் ரவுடிகள் வேட்டையில் போலீசார் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதையடுத்து நேற்று மாலை 4 மணி முதல் ரவுடிகள் வேட்டை நடைபெற்று வருகிறது.

சென்னையிலும் ரவுடிகள் வேட்டை நேற்று மாலையில் இருந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சென்னையை போன்று தமிழகத்தில் உள்ள மற்ற மாநகர பகுதிகளிலும், மாவட்டங்களிலும் விடிய, விடிய ரவுடிகள் வேட்டை நடைபெற்றது. பழைய குற்றவாளிகள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருப்பவர்கள், கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் உள்பட குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய அனைத்து ரவுடிகளையும் வேட்டையாடி கைது செய்ய போலீஸ் உயர் அதிகாரிகள் நேரடியாக களம் இறங்கினார்கள்.

இதன்படி கிராமப்புறங்கள் முதல் நகரப் பகுதிகள் வரை அனைத்து இடங்களிலும் இடைவிடாமல் சோதனை நடத்தப்பட்டது.

தலைமறைவு ரவுடிகளின் வீடுகள், அவர்கள் தஞ்சம் புகுந்திருந்த இடங்கள் ஆகியவற்றில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை சோதனை நடைபெற்றது. இதில் ரவுடிகள் கொத்து கொத்தாக கைது செய்யப்பட்டனர்.

நேற்று மாலை 4 மணிமுதல் நடத்தப்பட்டு வரும் சோதனையில் நூற்றுக்கணக்கான ரவுடிகள், போலீஸ் பிடியில் சிக்கினர். இன்று காலை வரையில் 870 பழைய குற்றவாளிகள் பிடிபட்டனர். இவர்களில் 450 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 181 பேர் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள்.

அவர்களிடம் இருந்து ஏராளமான கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த அதிரடி வேட்டை தொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திர பாபு, மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சில அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றதை அடுத்து மாநிலம் முழுவதும் 48 மணிநேர ரவுடிகள் வேட்டையை தொடங்க உத்தரவிடப்பட்டது. இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் ஏ, பி, சி, டி என 4 வகையாக பிரிக்கப்பட்ட ரவுடிகளை பட்டியல் எடுத்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

குறிப்பாக ஏ- பிளஸ் கேட்டகிரியில் இருக்கும் ரவுடிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இதுபோன்ற ரவுடிகளை பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டு, அதன் பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று காலை வரையில் 560 குற்றவாளிகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட 250 கத்திகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 3 நாட்டு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பழைய குற்றவாளிகள், கொலை வழக்கில் தொடர்பு உடையவர்கள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருப்பவர்கள் உள்பட அனைத்து விதமான ரவுடிகளையும் பிடித்து சிறையில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாளை மாலை 4 மணிவரையில் 48 மணிநேர ரவுடிகள் வேட்டை நடைபெறும். இந்த நடவடிக்கையின்போது தலைமறைவாக இருக்கும் அனைத்து ரவுடிகளையும் பிடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், நெல்லை ஆகிய மாவட்டங்களில் முக்கிய குற்றவாளிகள் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போலீசில் சிக்கியுள்ள 500-க்கும் மேற்பட்ட ரவுடிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்கு பிறகு அவர்களை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் ரவுடிகள் செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் பாயும். இதில் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு டி.ஜி.பி. சைலேந்திர பாபு கூறினார்.

இதற்கிடையே டி.ஜி.பி. அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை சார்பில் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 13 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரில் பழைய குற்றவாளிகள், ரவுடிகள் உள்ளிட்ட 300 பேரின் வீடுகளில் போலீசார் விடிய விடிய அதிரடி சோதனை நடத்தினர். இதில் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலத்தில் நேற்றிரவு முதல் விடிய விடிய போலீசார் ரவுடிகளை விரட்டி விரட்டி பிடித்தனர். இதில் பழைய குற்றங்களில் தொடர்புடையவர்கள், தலைமறைவாக இருந்தவர்கள் மற்றும் புதிய ரவுடிகள் என சுமார் 60 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் புறநகரில் நடந்த வேட்டையில் பழைய ரவுடிகள் மற்றும் புதிய ரவுடிகள் என 31 பேர் போலீசாரிடம் சிக்கினர்.

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும், நாளை இரவு வரை இந்த ரவுடிகள் வேட்டை தொடரும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.



அரியலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் ரவுடிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாள் இரவில் 36 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 103 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விடிய விடிய நடத்தப்பட்ட சோதனையில் 31 அரிவாள்கள் பிடிபட்டுள்ளன.

தஞ்சையில் 63 ரவுடிகளும், கன்னியாகுமரியில் 39 ரவுடிகளும், சிவகங்கையில் 37 ரவுடிகளும், விருதுநகரில் 53 ரவுடிகளும், நெல்லையில் 37 ரவுடிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வேலூர் மாவட்டத்தில் 41 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலையில் 5 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். 21 ரவுடிகளிடம் நன்னடத்தைச் சான்றிதழ் கையெழுத்து வாங்கிவிட்டு அனுப்பி உள்ளனர். திருப்பத்தூரில் 42 ரவுடிகளும், ராணிப்பேட்டையில் 30 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக காவல் துறையின் இந்த திடீர் நடவடிக்கை காரணமாக சென்னை உட்பட அனைத்து இடங்களிலும் ரவுடிகள் கலக்கம் அடைந்துள்ளனர். போலீசுக்கு பயந்து தலைமறைவாக உள்ள ரவுடிகளும் காவல் நிலையத்தில் சரணடைய முடிவு செய்துள்ளனர். இதுபோன்று சரணடையும் ரவுடிகளையும் சிறையில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக போலீசாரின் இந்த ரவுடிகள் வேட்டை பொதுமக்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


Tags:    

Similar News