செய்திகள்
கொள்ளை

ஜோலார்பேட்டையில் ஷோரூமில் இளம்பெண்ணிடம் நகை- பணம் பறிப்பு

Published On 2019-10-22 11:29 GMT   |   Update On 2019-10-22 11:29 GMT
ஜோலார்பேட்டையில் பைக் ஷோரூமில் இருந்த பெண்ணிடம் நகை, பணம் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை நியுஓட்டல் தெருவை சேர்ந்தவர் அருண் (வயது 35). இவர் ஜோலார்பேட்டை பஸ் நிலையம் வாணியம்பாடி, திருப்பத்தூர் மெயின் ரோட்டில் பழைய கார், பைக் வாங்கி விற்பனை செய்யும் ஷோரூம் வைத்துள்ளார்.

இவரது மனைவி சுதா (வயது 35). நேற்று காலை கார் வாங்குவதற்காக அருண் வேலூர் வந்துள்ளார்.

அவரது மனைவி மட்டும் ஷோரூமில் தனியாக இருந்தார். அப்போது டிப்-டாப் உடையணிந்த வாலிபர் ஒருவர் வந்துள்ளார். தனது மனைவிக்கு ஒரு பைக் வாங்க வேண்டுமென கூறி பணத்தை காண்பித்தார்.

இதை நம்பிய சுதா பைக்கை சோதனை செய்வதற்காக ஸ்டாட் செய்தபோது ஸ்டாட் ஆகவில்லை. அப்போது அந்த வாலிபர் சுதாவின் துப்பட்டாவை பிடித்து இழுத்து கீழே தள்ளி அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயின் மற்றும் கல்லாவில் இருந்த ரூ.45 ஆயிரம் பணம் ஆகியவற்றை எடுத்து கொண்டு பைக்கில் தப்பி சென்று விட்டார்.

செயின் அறுத்த போது சுதாவின் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சுதா ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News