செய்திகள்
ராமதாஸ்

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு கலெக்டர் அலுவலகங்கள் முன்பு 29-ந்தேதி பாமக போராட்டம்- ராமதாஸ்

Published On 2021-01-17 08:15 GMT   |   Update On 2021-01-17 08:15 GMT
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு கலெக்டர் அலுவலகங்கள் முன்பு 29-ந்தேதி பாமக போராட்டம் நடைபெறும் என்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அறிவிக்கப்பட்ட தொடர் போராட்டங்களில் இதுவரை 5 கட்ட போராட்டங்கள் 8 நாட்களுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் தொடங்கி சிறு கிராமங்கள் வரை நடத்தப்பட்ட போராட்டங்களின் வாயிலாக வன்னியர்களின் எழுச்சி அரசுக்கு துல்லியமாக தெரிவிக்கப்பட்டு விட்ட நிலையில், இட ஒதுக்கீடு இன்னும் அறிவிக்கப்படாதது பெரும் அநீதியாகும்.

தமிழகத்தை ஆளும் அரசுக்கு சமூகநீதியில் அக்கறையும், மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கடமை உணர்வும் இருந்திருந்தால் இந்நேரம் வன்னியர்களின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்திருக்கும். யாருடைய உரிமையையும், பங்கையும் பறிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் வன்னியர்களுக்கு இருந்ததில்லை. வன்னியர்கள் போராடிப் பெற்ற, உயிர்த்தியாகம் செய்து பெற்ற இட ஒதுக்கீட்டு உரிமையை கடந்த 32 ஆண்டுகளாக அனுபவித்து வரும் பிற சமூகங்களுக்கும் ஒரு பகுதி இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் 20சதவீத தனி இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை உள் ஒதுக்கீடு என்ற அளவில் தளர்த்திக் கொண்டிருக்கிறோம்.

இவ்வளவுக்குப் பிறகும் வன்னியர்களின் உள்ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு தயங்குவதற்கு எந்த விதமான நியாயமான காரணங்களும் இல்லை.

வன்னிய மக்களின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையில் உள்ள நியாயங்களை தமிழக அரசு நன்றாக உணர்ந்திருக்கிறது. வன்னியர்களின் கோரிக்கை நியாயமற்றது; அதை ஏற்க முடியாது என்று தமிழக அரசால் கூற முடியாது.

ஆனாலும், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது எந்த வகையிலும் நியாயமில்லை. இது வன்னிய சமுதாய மக்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதியாகும். வன்னியர்களின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை வென்றெடுக்காமல் பா.ம.க.வும் ஓயப்போவதில்லை.

வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டுக் கோரிக்கையை வலியுறுத்தும் தொடர் போராட்டங்களின் அடுத்தக் கட்டமாக வருகிற 29-ந்தேதி காலை 11 மணிக்கு தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக பாட்டாளி மக்கள் கட்சி - வன்னியர் சங்கம் சார்பில் மாபெரும் மக்கள்திரள் போராட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோரிக்கை நிறைவேற்றப் படாவிட்டால், 29-ந்தேதி போராட்டத்திற்குப் பிறகு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் உயர்நிலை அமைப்புகள் கூடி அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கும் என்பதை தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News