செய்திகள்
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி - முதன்மை கல்வி அலுவலக சூப்பிரண்டு தலைமறைவு
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்ததாக முதன்மை கல்வி அலுவலக சூப்பிரண்டை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை:
திருவள்ளூரை அடுத்த கைவண்டூர் குப்பம்மாசத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 52). இவர், தனது மகனுக்கு கல்வித்துறையில் அரசு வேலை வேண்டி விண்ணப்பித்து இருந்தார்.
இதற்காக திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் சூப்பிரண்டாக பணிபுரியும் திருவள்ளூர் நேதாஜி சாலையை சேர்ந்த சலாவுதீன் என்பவரின் உதவியை நாடினார்.அதற்கு அவர், கல்வித்துறையில் ‘லேப் அசிஸ்டென்ட்’ வேலை வாங்கி தர வேண்டுமானால் ரூ.8 லட்சம் தரவேண்டும் என்று கூறியதாகவும், அதன்படி 2019-ம் ஆண்டு ஜானகிராமன், சலாவுதீனிடம் ரூ.8 லட்சத்தை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட அவர், சொன்னபடி இதுநாள் வரை அரசு வேலை வாங்கி தராமல் அலைக்கழித்து வந்தார். இதனால் பாதிக்கப்பட்ட ஜானகிராமன், பலமுறை அவரை தொடர்பு கொண்டும் அவர் சரியான பதில் கூறாமல் காலம் தாழ்த்தி வந்தார். ஒரு கட்டத்தில் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது சலாவுதீன் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது. எனவே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்த சலாவுதீன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் தாலுகா போலீசில் ஜானகிராமன் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சலாவுதீனை தேடி வருகின்றனர்.