செய்திகள்
பணி நிரந்தரம் செய்யக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன் வாடி ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஒப்பாரி வைத்து கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர்:
பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியருக்கு ரூ.10 லட்சமும், உதவியாளருக்கு ரூ.5 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
நேற்று 2-வது நாளாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் பிரேமா தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் மாலதி, மாவட்ட நிர்வாகிகள் அனிபா, வைத்தியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அங்கன்வாடி ஊழியர்கள் வாயில் கருப்பு துணி கட்டியும், ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.