உண்மை எது
மத்திய அரசு வெளியிட்டதாக வைரலாகும் அறிக்கை
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக கூறும் அறிக்கை வைரலாகி வருகிறது.
ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக கொரோனா தொற்றின் மூன்றாம் அலை உருவாகும் அபாயம் எழுந்துள்ளது. இந்த நிலையில், ஒமைக்ரான் பற்றிய போலி தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அந்த வரிசையில், மத்திய நிதியமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டதாக கூறும் அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் அறிக்கையில், ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்சன் வாங்குவோருக்கான அகவிலைப்படியை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்த இணைய தேடல்களில் மத்திய அரசின் நிதியமைச்சகம் சார்பில் இதுபோன்று எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் மத்திய அரசின் பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ (பி.ஐ.பி.) சார்பிலும் இந்த தகவல் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுபற்றிய தகவல் பி.ஐ.பி. அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இடம்பெற்று இருக்கிறது.
அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்சன் வாங்குவோருக்கு அகவிலைப்படி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.