செய்திகள்
கோப்புபடம்

பாலில் வி‌ஷம் கலந்து குடித்து அக்காள்- தங்கை தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

Published On 2021-10-08 07:45 GMT   |   Update On 2021-10-08 07:45 GMT
சேலத்தில் அக்காள் -தங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

சேலம் வாய்க்கால்பட்டறை சின்னம்மாபேட்டை காந்தி நகரை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மனைவி லட்சுமி (வயது 70). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவரை காரிப்பட்டியில் வசித்து வரும் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சந்திரன் இறந்து விட்டார். இதையடுத்து அவரது மனைவி லட்சுமி வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவருக்கு உதவியாக அவரது தங்கை சரஸ்வதி (63) அவரது வீட்டில் வசித்து வந்தார். மாற்றுத்திறனாளியான இவருக்கும் நோய்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

அக்காள்- தங்கை இருவரும் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும், மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்ட பிறகும் நோய்கள் குணமாகவில்லை. இதனால் கடும் அவதி அடைந்த அவர்கள், நோய் கொடுமையில் வாழ்வதை விட உயிரை விடுவதே மேல் என முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து நேற்று இரவு இருவரும் பாலில் தூக்க மாத்திரைகள், வி‌ஷம் உள்ளிட்டவைகளை கலந்து குடித்து விட்டு தூங்கினர். இதனால் வாயில் நுரை தள்ளி, தூக்கத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று காலை வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. வீட்டில் இருந்து அவர்கள் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் கதவை திறந்து வீட்டுக்குள் பார்த்தனர். அங்கு லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது பற்றி வீராணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தற்கொலை செய்து கொண்ட இருவருடைய உடல்களை பார்த்தனர். அங்கு இருவரும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்றை கண்டுபிடித்தனர்.

அதில், எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நாங்கள் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்து கொள்கிறோம். வீட்டின் ஒரு இடத்தில் பணம் வைத்துள்ளோம். இந்த பணத்தை கொண்டு இறுதி சடங்கு செலவுகளை செய்யுமாறு அவர்கள் தங்கள் அண்ணனுக்கு எழுதி இருந்தனர்.

இதையடுத்து போலீசார், லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News