செய்திகள்
தேவேந்திர பட்னாவிஸ்

மூத்த பாஜக தலைவரிடம் பட்னாவிஸ் டியூசன் படிக்க வேண்டும் -சிவசேனா

Published On 2019-12-02 06:33 GMT   |   Update On 2019-12-02 07:02 GMT
மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பாஜக மூத்த தலைவரான ஏக்நாத் காட்சேவிடம் டியூசன் படிக்க வேண்டும் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
மும்பை:

மகாரஷ்டிரா அரசியலில் நிலவிய ஏராளமான குழப்பங்களுக்கு பிறகு சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் கடந்த மாதம் 28ம் தேதி மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்றார். 

மகாராஷ்டிரா மாநில சட்டசபை சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்காக சட்டசபை நேற்று கூடியது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நானா பட்டோலே போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல்,  சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருந்தபோது செய்த அதே தவறுகளை பட்னாவிஸ் மீண்டும் செய்யமாட்டார் என நம்புகிறோம் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

‘பெரும்பான்மை இல்லாத நிலையில் எல்லோரையும் ஏமாற்றி, சட்டவிரோதமாக பதவியேற்றதால் பட்னாவிஸ் வரலாற்றில் சற்று சறுக்கியுள்ளார் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். வெறும் 80 மணி நேரங்கள் மட்டுமே பட்னாவிஸ் முதல்வராக இருந்தார். 



இந்த களங்கத்தில் இருந்து அவர் விடுபட நினைத்தால் விதிமுறைகளுக்கு உட்பட்டு எதிர்க்கட்சி தலைவராக செயல்பட வேண்டும். அதுமட்டுமல்லாது எதிர்க்கட்சி தலைவராக செயல்பட பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான ஏக்நாத்காட்சேவிடம் டியூசன் செல்ல வேண்டும். பட்னாவிஸ் கண்ணியமான எதிர்க்கட்சித் தலைவராக நடந்து கொள்வார், அவர் முதல்வராக இருந்த போது செய்த அதே தவறுகளை மீண்டும் செய்யமாட்டார் என நம்புகிறோம்’ என சிவசேனாவின் சாம்னா பத்திரிகை தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News