செய்திகள்
கன்னியகோவில் அருகே குடிபோதையில் சுவரில் தலை மோதி லாரி டிரைவர் பலி
கன்னியக்கோவில் அருகே குடிபோதையில் சுவரில் தலை மோதியதில் லாரி டிரைவர் பரிதாபமாக இறந்து போனார்.
பாகூர்:
கன்னியகோவில் அருகே சுள்ளியாங்குப்பம் நந்தினி நகரை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 38). லாரி டிரைவர். இவருக்கு விமலா என்ற மனைவியும், தனுஜா (13) என்ற மகளும் மற்றும் அஸ்வன் (8) என்ற மகனும் உள்ளனர். விமலா அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
தண்டபாணிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. நேற்று மதியம் வேலை முடிந்து தண்டபாணி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.
அப்போது குடிபோதை காரணமாக தண்டபாணி வீட்டின் சுவற்றில் தலை மோதியதில் தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த தண்டபாணி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.
மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய அவரது மகன் அஸ்வன் வீட்டில் தந்தை ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து கொண்டு இருந்த தாய் விமலாவிடம் தகவல் தெரிவித்தார்.
இதை கேட்டு பதறியடித்து விமலா வீட்டுக்கு விரைந்து வந்தார். பின்னர் கணவரை மீட்டு கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தண்டபாணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, ஏட்டு லூர்து நாதன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.