உலகம்
புதின் - லாயிட் ஆஸ்டின்

போரை தவிர்ப்பது பற்றி புதின் தான் முடிவு செய்ய வேண்டும் - அமெரிக்க ராணுவ மந்திரி சொல்கிறார்

Published On 2022-01-29 10:03 GMT   |   Update On 2022-01-29 10:03 GMT
உக்ரைனை ரஷியா ஆக்கிரமிக்க முயற்சி செய்தால் அதிக உயிரிழப்புகள் மற்றும் கடும் விளைவுகள் ஏற்படும் என அமெரிக்க ராணுவ மந்திரி கூறியுள்ளார்.
வாஷிங்டன்:

ரஷியா - உக்ரைன் இடையே போர் பதற்றம் அதிகரித்தபடியே இருந்து வருகிறது. உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் சேருவதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து உக்ரைன் எல்லையில் ரஷியா பெரும் அளவில் தனது படைகளை குவித்துள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் படை எடுக்கலாம் என்ற பதற்றம் நீடித்து வருகிறது.

உக்ரைன் மீது படை எடுத்தால் ரஷியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஜோபைடன் பயங்கரமான எச்சரிக்கைகளை விடுத்தார். உக்ரைனை தாக்கினால் அந்நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் களம் இறங்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிராக இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உள்ளன. எல்லையில் உக்ரைன்-ரஷிய ராணுவத்தினர் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே போர் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. ரஷிய அதிபர் புதினிடம் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் பேசினார். அப்போது போரை தவிர்ப்பது பற்றி எடுத்துரைத்தார்.

இது குறித்து ரஷியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்வ்லாவ் ரோவ்கூறும் போது, ‘போரை ரஷியா விரும்பவில்லை. அதே வேளையில் நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளமுடியாது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் போரை தவிர்ப்பது புதின் கையில் தான் உள்ளது என்று அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ரஷிய அதிபர் புதின் உக்ரைனுக்கு எதிராக படைகளை பயன்படுத்துவதற்கான இறுதி முடிவை எடுப்பார் என்று நாங்கள் நம்பவில்லை. என்றாலும் இப்போது அவரிடம் தான் அந்த முடிவு இருக்கிறது. போரை தவிர்ப்பது பற்றி அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

உக்ரைன் நகரங்கள் மற்றும் குறிப்பிட்டதக்க பகுதிகளை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் ரஷியா தனது ஒரு லட்சம் ராணுவ வீரர்களை பயன்படுத்தலாம். ரஷியா அளிக்கும் தவறான தகவல்களில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். அவர்கள் எங்களை முட்டாள் ஆக்க முடியாது‘ என்றார்.

மேலும் ராணுவ ஜெனரல் மார்க் மில்லே கூறும்போது, ‘உக்ரைனை சுற்றி ரஷிய தரைப்படை, கடற்படை, விமானப்படை மட்டுமல்ல சைபர் மற்றும் மின்னணு போர் திறன்கள், சிறப்பு நடவடிக்கை படைகளும் உள்ளன.

உக்ரைனை ரஷியா ஆக்கிரமிக்க முயற்சி செய்தால் அதிக உயிரிழப்புகள் மற்றும் கடும் விளைவுகள் ஏற்படும்’ என்றார்.
Tags:    

Similar News