தமிழ்நாடு
ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்த காட்சி.

ஈரோட்டில் இன்று 4 ஆயிரம் ஜவுளி கடைகள் அடைப்பு- ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு

Published On 2022-04-15 06:32 GMT   |   Update On 2022-04-15 06:32 GMT
கடந்த 2 ஆண்டுகளில், பஞ்சு விலை ஒரு கண்டி எனப்படும் 356 கிலோ, ரூ.43 ஆயிரத்தில் இருந்து தற்போது ரூ.1 லட்சம் வரை விற்பனையாகிறது.
ஈரோடு:

நாடு முழுவதும் நூல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஜவுளி உற்பத்தி தொழிலில் ஈடுபடும் வியாபாரிகள் ஜவுளிகளை உற்பத்தி செய்த விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, மாதம் ஒரு முறை விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும், காட்டனை அத்தியாவசிய பட்டியலில் கொண்டு வரக்கோரி கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோட்டில் ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். அதன்படி ஈரோடு மாநகர் பகுதி முழுவதும் ஜவுளி உற்பத்தி கடைகளும், அதனை சார்ந்த நிறுவனங்கள் என 4 ஆயிரம் கடைகள் இன்று அடைக்கப்பட்டிருந்தன.

இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஈஸ்வரன் கோயில் வீதி, என்.எம்.எஸ் காம்பவுண்ட், திருவேங்கடவீதி போன்ற பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன. கடை முன்பு நூல் விலை உயர்வை கண்டித்து இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் என்கிற வாசகம் அடங்கிய நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.

இது குறித்து ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் தலைவர் கலைசெல்வன் கூறியதாவது:-

கடந்த 2 ஆண்டுகளில், பஞ்சு விலை ஒரு கண்டி எனப்படும் 356 கிலோ, ரூ.43 ஆயிரத்தில் இருந்து தற்போது ரூ.1 லட்சம் வரை விற்பனையாகிறது. பஞ்சு மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த பல்வேறு ஜவுளி சார்ந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்று, பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளது. இதற்காக பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர், ஜவுளித்துறை அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வு, ஒட்டு மொத்த ஜவுளி தொழிலுக்கு மிகப்பெரிய நெருக்கடியாகவும், தொழில் அழியும் அபாயத்துக்கு கொண்டு செல்கிறது. இத்தொழிலை காப்பாற்றும் நோக்கத்தில், பஞ்சு, நூல் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசுகள் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

காட்டன் நூலை அத்தியாவசிய பட்டியலில் கொண்டு வந்து நூல் விலையை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று மாநகர் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தி நிறுவனங்களும், அதனை சார்ந்த நிறுவனங்களும் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இந்த போராட்டத்தின் காரணமாக ரூ.50 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. நூல் விலையை மாதம் ஒருமுறை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News