லைஃப்ஸ்டைல்
மகளிர் தினம்

மகளிர் தினம் உருவான வரலாறு

Published On 2021-03-08 02:42 GMT   |   Update On 2021-03-08 02:42 GMT
எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கக் கூடிய பெண்களுக்கும், சிறந்த இல்லத்தரசிகளுக்கும் சர்வதேச மகளிர்தின வாழ்த்துக்களைக் கூறுவதோடு சவாலைத் தேர்வு செய் என்பதையும் கூற கடமைப்பட்டுள்ளோம்.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தினங்களில் மகளிர்தினம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததும், முக்கியம் வாய்ந்ததும் என்று சொன்னால் அது மிகையாகாது.

இன்றைய காலகட்டத்தில் மகளிர்தினம் என்பது வெறும் வார்த்தைகளால் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளும் தினமாக இல்லாமல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தினமாக கொண்டாடப்படுவதற்கு காரணமாக இருந்தவர்கள், அதன் முக்கியத்துவம் மற்றும் அதன் பின்னணியைச் சிறிது திரும்பிப் பார்ப்போம்.

உலக மகளிர் தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந் தேதி கொண்டாடப்படுகின்றது.

மகளிர் தின வரலாறு:-

வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த பெண்கள் இன்று ஆணுக்கு நிகராக ஆட்டோ முதல் வாணுர்தி ஓட்டுவதாகட்டும், பல்வேறு பன்நோக்கு நிறுவனங்களில் உயர் பதவியை வகிப்பதாகட்டும், அரசியல், கல்வி, தொழில், சமுதாயப் பணி என அனைத்திலும் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும்.

ஆணுக்கு நிகராக இந்தச் சமுதாயத்தில் பெண்களுக்கு உரிமை, வேலைக்கேற்ற ஊதியம், எட்டுமணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை எனப்பல கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் போராடினார்கள்.

பாரிஸ் நகரத் தெருக்களில் ஆயிரக்கணக்கில் கூடிய பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காட்டுத் தீ போல இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. அந்நாட்டுப் பெண்களும் தங்களின் உரிமைகளுக்காகப் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இத்தாலி நாட்டுப் பெண்களும், தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.

பிரான்ஸ், புரூஸ்லியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம் பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் அளித்தார். அந்தநாள் தான் 1848-ம் ஆண்டு மார்ச் 8-ந் தேதியாகும். உலகப் பெண்களின் போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்த அந்த நாளே, மகளிர்தினக் கொண்டாட்டத்திற்கு அடிப்படையாக அமைந்தது. பின்னர், ஒரு மாநாட்டில் ஜெர்மனியின் சோசலிச ஜனநாயக கட்சியின் மகளிர் அணித் தலைவியான க்ளாரா ஜெட்கின், போராட்டம் வெற்றி பெற்ற நாளான மார்ச் 8-ந் தேதியை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடுவதற்கான யோசனையை முன் வைத்தார்.

1910-ம் ஆண்டு பதினேழு நாடுகளிலிருந்து வந்த அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் அந்தத் திட்டத்தை வரவேற்றனர். பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் 1975-ம் ஆண்டை சர்வதேச பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.

இந்தியாவிலும் மகளிர் தினமானது மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்திற்கான கருவானது தேர்ந்தெடுக்கப்பட்டு மிகவும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த 2021-ம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினத்தின் கருவானது சவால்களைத் தேர்வு செய் என்பதாகும். பெண்கள் தங்கள் சொந்த எண்ணங்கள் மற்றும் செயல்களுக்கு ஒவ்வொரு நாளும் பொறுப்பாளிகளாக இருக்கிறார்கள் என்றும் அவர்கள் அன்றாடம் உலகிற்கு சவால் விடுகிறார்கள் என்றும் இது கூறுகிறது. உலகில் பாலின சார்பு மற்றும் சமத்துவமின்மை ஆகியவற்றை தேர்வு செய்து அவற்றை சவாலாக ஏற்கலாம் என்பதையும் இக்கரு நமக்கு குறிக்கின்றது. வீடுகளில் மட்டுமல்லாது பெண்கள் சமுதாயத்திலும் தங்களது பங்களிப்பை மிகச்சிறப்பாகச் செய்து வருகிறார்கள். குறிப்பாக நோய்த் தொற்று காலங்களில் சுகாதாரப் பணியாளர்கள், பராமரிப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், சமூக அமைப்பாளர்கள், மருத்துவர்கள் மற்றும் முன்மாதிரியான மற்றும் பயனுள்ள தேசியத் தலைவர்களாகவும் முன் வரிசையில் பெண்கள் நிற்கிறார்கள்.

எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கக் கூடிய பெண்களுக்கும், சிறந்த இல்லத்தரசிகளுக்கும் சர்வதேச மகளிர்தின வாழ்த்துக்களைக் கூறுவதோடு சவாலைத் தேர்வு செய் என்பதையும் கூற கடமைப்பட்டுள்ளோம்.
Tags:    

Similar News