தமிழ்நாடு
அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் மணல் குவாரிகள் விரைவில் தொடங்கப்படும்- அமைச்சர் துரைமுருகன்

Published On 2022-01-05 04:21 GMT   |   Update On 2022-01-05 04:21 GMT
தமிழகத்தில் மணல் குவாரி தொடங்குவது குறித்து அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலூர்:

வேலூர் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகளை பார்த்தால் கொரோனா போல் உள்ளது. தாறுமாறாக பஸ் நிலையத்தை கட்டி வருகின்றனர்.

பக்கத்தில் உள்ள தனியார் இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்கும் அளவிற்கு கட்டுமானப்பணிகள் திட்டமிடப்பட்டு நடந்துள்ளது.

புதிய பஸ் நிலையத்தில் 2 நுழைவு வாயில்கள் அமைக்கப்படும். மேலும் நுழைவுவாயில் அருகே எந்தவிதமான கடைகளும் கட்டக்கூடாது. கழிவறைகள் நவீனமாக கட்டி முடிக்கப்பட வேண்டும்.

இனிவரும் காலங்களில் புதிய பஸ் நிலையத்தை அடிக்கடி ஆய்வு செய்வேன். இதில் முறைகேடாக கட்டப்படுவது தெரிய வந்தால் சிபிசிஐடி மூலம் விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலூர் கிரீன் சர்க்கிள் இருக்கும் வரை அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் தீர்க்க முடியாது. கிரீன் சர்க்கிள் பகுதியில் ஓட்டல் கடைகள் முன்பாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் மணல் குவாரி தொடங்குவது குறித்து அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும். தமிழகத்தில் எந்த பகுதியிலும் அனுமதி இல்லாமல் தற்போது கல் குவாரிகள் இயங்கவில்லை.

வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரி அருகே மேம்பாலம் அமைப்பது குறித்து நீண்ட நாட்களாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. வேலூர் கலெக்டர் அலுவலகம் காங்கேய நல்லூர் இடையே பாலாற்றில் பாலம் அமைப்பது குறித்து ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பாலம் அமைந்தால் புதிய பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News