செய்திகள்
மின்இணைப்புக்கு லஞ்சம் - கைதான பெண் அதிகாரி சிறையில் அடைப்பு
அவினாசி மின்வாரிய அலுவலகத்திற்கு கவுரி சென்றார். அங்கு பணியில் இருந்த மின்வாரிய அதிகாரி தில்சாத் பேகத்திடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து மங்கலம் செல்லும் சாலையில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம், தொழில்நுட்ப பிரிவு, நிர்வாக பிரிவு, வருவாய் பிரிவு, உதவி மின் பொறியாளர் அலுவலகம் என அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் உதவி மின் பொறியாளராக தில்சாத் பேகம் (வயது 36) உள்பட 50 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த அலுவலகத்தில் மின் இணைப்பு பெறுவது, இணைப்பு, இடமாற்றம் உள்ளிட்டவைகளுக்கு மின் நுகர்வோர் விண்ணப்பம் அளிக்கின்றனர். இந்தநிலையில் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த கவுரி (42) என்பவர் அவிநாசி ராக்கியாபாளையத்தில் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு தற்காலிக மின் இணைப்பு பெற உதவி மின்பொறியாளர் அலுவலகத்தை அணுகி உள்ளார்.
அதைத்தொடர்ந்து கடந்த 8&ந்தேதி ஆன்-லைன் மூலம் தற்காலிக மின் இணைப்புக்கு கவுரி விண்ணப்பித்தார். ஆனால் தற்காலிக மின்இணைப்புக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். இதனால் கவுரி திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இது தொடர்பாக புகார் அளித்தார்.
இதையடுத்து ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரத்தை சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரியிடம் கொண்டு கொடுக்குமாறு லஞ்ச ஒழிப்பு போலீசார் கவுரியை அனுப்பி வைத்தனர். அதன்படி அவினாசி மின்வாரிய அலுவலகத்திற்கு கவுரி சென்றார். அங்கு பணியில் இருந்த மின்வாரிய அதிகாரி தில்சாத் பேகத்திடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.
அப்போது மின்வாரிய அலுவலகத்திற்கு வெளியே நின்ற லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் விரைந்து சென்று தில்சாத் பேகத்தை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து தில்சாத் பேகம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.