செய்திகள்
55 அடியை கடந்த வைகை அணையை காணலாம்

வைகை அணை நீர்மட்டம் 2 நாட்களில் 6 அடி உயர்வு

Published On 2020-11-21 03:29 GMT   |   Update On 2020-11-21 03:29 GMT
நீர்வரத்து அதிகரிப்பால் வைகை அணை நீர்மட்டம் கடந்த 2 நாட்களில் 6 அடி உயர்ந்தது.
ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. குறிப்பாக வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பான வருசநாடு மலைப்பகுதியில் பெய்த கனமழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி ஆறு, சுருளியாறு ஆகியவற்றில் நீர்வரத்து ஏற்பட்டதால், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

குறிப்பாக நேற்றுமுன்தினம் பிற்பகல் நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதன்காரணமாக கடந்த 18-ந்தேதி 49.74 அடியாக இருந்த வைகை அணையின் நீர்மட்டம் 2 நாட்களில் 6 அடி உயர்ந்தது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் 55.70 அடியாக உள்ளது. மொத்த உயரம் 71 அடியாகும்.

நேற்று அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 413 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் சேர்த்து வினாடிக்கு 1,719 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் மொத்த நீர்இருப்பு 2 ஆயிரத்து727 மில்லியன் கனஅடியாக உள்ளது.

அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவைவிட, நீர்வரத்து அதிகம் உள்ளதால் வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News