லைஃப்ஸ்டைல்
சாதிக்கும் பெண்கள் சொந்த வாழ்க்கையிலும் சறுக்குவதில்லை

சாதிக்கும் பெண்கள் சொந்த வாழ்க்கையிலும் சறுக்குவதில்லை

Published On 2021-06-08 03:30 GMT   |   Update On 2021-06-08 03:30 GMT
பெண்கள், பல துறைகளில் ஈடுபட்டு சாதிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையிலும் கவனத்தை செலுத்தவேண்டும்.
பெண்கள், பல துறைகளில் ஈடுபட்டு சாதிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையிலும் கவனத்தை செலுத்தவேண்டும். சொந்த வாழ்க்கையில் சறுக்கல் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம். ஏன்என்றால் சொந்த வாழ்க்கை வெற்றி என்பது தொழில் வாழ்க்கை வெற்றிக்கு அடித்தளமிட்டுக் கொடுத்து, அவர்களை ஈடுபட்ட துறையில் சாதிக்கவைக்கும் சக்திகொண்டது.

சரி.. தனிப்பட்ட வாழ்க்கையை வெற்றிகரமாக, சறுக்கலின்றி அமைத்துக்கொள்வது அத்தனை எளிதான காரியமா?

எளிதான காரியம் இல்லைதான்! எல்லாப் பெண்களின் குடும்பச் சூழலும் ஒரே மாதிரி அமைவதில்லை. வெவ்வேறு சூழலில் வளர்ந்த பெண்கள் திருமணமாகி புதிய சூழலுக்குள் வரும்போது சற்று திகைத்துப் போகிறார்கள். புது மனிதர்கள், புது உறவுகள், புதிய வழக்கங்கள் என்று எல்லாம் புதிதாக உருவெடுக்கும்போது அவளும் புதிதாக மாற முயற்சிக்கிறாள்.

புகுந்த வீட்டில் இருக்கும் உறவுகள் சில நேரங்களில் அவளுக்கு அதற்கான அவகாசத்தைகூட அளிப்பதில்லை. கணவர் குடும்பத்தினர் சில விஷயங்களை அவள் மீது திணிக்கிறார்கள். கணவரது குடும்பத்தினர் அனைவரையும் தனது செயல்பாடுகள் மூலம் திருப்திப்படுத்துவது என்பது, பெரும்பாலான பெண்களுக்கு இயலாத காரியம். அதை நினைத்து பெண்கள் சோர்வடைந்துவிடக் கூடாது. சோர்வடைந்தால் அவர்களது மனநலமும், உடல்நலமும் பாதிக்கப்படும். அவர்களது குடும்ப வாழ்க்கையும் பாதிக்கப்படும். அதே நேரத்தில் மனக்குழப்பமடைந்து, குடும்ப உறவுகளில் இருந்து பிரிந்துசெல்லவும் முயற்சிக்கக்கூடாது.

பெண்களால் எதுவும் முடியும். புதிய உறவுகளை அவர்களால் அன்பாலும் வெல்லமுடியும். அதை நிரூபிக்க பெண்கள் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். பெண்கள் முன்பு பொறுமைமிக்கவர்களாகத்தான் இருந்தார்கள். பொறுமையின் சிகரங்களாக இருந்த அவர்களை குமுறும் எரிமலைகளாக மாற்றிவிட்டது இன்றைய வாழ்க்கைச் சூழல். அவர்களுடைய கல்வி அவர்களுக்கு சம்பாதிக்க கற்றுக் கொடுத்ததே தவிர, மணவாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள கற்றுத் தரவில்லை. அழகை, ஆரோக்கியத்தை மேம்படுத்த அவர்கள் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அன்பை மேம்படுத்த அவர்கள் கற்றுக்கொண்டிருக்கவில்லை.

வெளியுலக பிரச்சினைகளை எப்படி வேண்டுமானாலும் எதிர்கொண்டு ஜெயிக்கலாம். ஆனால் குடும்ப வாழ்க்கை என்று வரும்போது பொறுமையாகத்தான் எதையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த பொறுமை பிந்தைய நாட்களில் நிச்சயம் பல நன்மைகளை ஏற்படுத்தித் தரும். பொறுமை ஏமாளித்தனமோ, கோழைத்தனமோ அல்ல. பொறுமை விலைமதிப்பற்றது. பெண்களுக்கு நிறைந்த பலனை தரத்தக்கது.

பெண்கள் மிகசிறந்த அன்பு என்ற ஆயுதத்தோடு புதிய உறவுகளை அணுக வேண்டும். கணவரது குடும்பத்தினர் உங்களை புரிந்து ஏற்றுக்கொள்ளும் வரை அமைதி காக்க வேண்டும். அவர்கள் ஒருவேளை உங்களை தவறாக புரிந்துகொண்டு செயல் படத் தொடங்கினால் தவறுகளை புரியவைக்க புத்திசாலித்தனத்தை துணையாக்கிக்கொள்ளவேண்டும். ஆத்திரமான பேச்சுக்கள், கோபம் போன்றவை உறவுகளை சீர்குலைக்க மட்டுமே உதவும்.

‘நான் நிறைய படித்தவள். அதிகம் சம்பாதிப்பவள். தகுதிமிக்க எனக்கு புத்தி சொல்ல இவர்கள் யார்?’ என்ற கர்வம் தலைதூக்கினால் ஆபத்து. அதனால் ஒட்டுமொத்த உறவுகளும் காலப்போக்கில் உங்களுக்கு தூரமாகி விடும் அபாயம் உண்டு.

அன்பு என்பது அனைவரின் இதயத்தையும் பிரகாசமாக்கும். அந்த பிரகாசம் பெண்களின் வாழ்க்கையை அழகாக்கும். முகத்துக்கு நேராக நடக்கும் சச்சரவுகளுக்கு உங்கள் அமைதியை பங்களிப்பாக கொடுத்துப் பாருங்கள். உங்களை எதிர்த்தவர்கள் சிந்திக்க ஆரம்பிப்பார்கள். அந்த சிந்தனையே உங்களைப் பற்றிய பல உண்மைகளை புலப்படுத்தும்.

பல பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றல் அன்பிற்கு இருக்கிறது. அதன் வல்லமையை நீங்கள் உணர்ந்து மற்றவர்களுக்கு புரிய வையுங்கள். அன்பு என்ற பிரம்மாஸ்திரத்திற்கு விழாத மனிதர்களே இல்லை. பெண்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை சிறப்பாக வடிவமைக்க அதிக அன்பை செலுத்தவேண்டும்.

உங்கள் அன்புக்கு கட்டுப்படாதவர்கள் யாராவது இருந்தால், அவர்களுடைய பேச்சு மற்றும் நடவடிக்கைகள் மூலம் அவர்களுடைய மனதில் உள்ளதை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். எப்படி அணுகினால் அவர்களுக்கு உங்களை புரியவைக்க முடியும் என்று சிந்தித்து செயல்படுங்கள். மற்றவர்களின் கருத்துக் களுக்கு மதிப்பு கொடுங்கள். கூடுமானவரை ஒருவரைப் பற்றி மற்றவரிடம் குறை பேசாதீர்கள். யாரையும் குறை கூறிப் பழக்கப்படாதீர்கள். மற்றவர்களின் நிறைகளை மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள். அது உங்களைப்பற்றிய தவறான அபிப்ராயங்களை தவிர்க்கும். உங்கள் கடமைகளை உணர்ந்து செய்யுங்கள். அது மற்றவர்கள் முன் உங்களை உயர்த்திக்காட்டும். நியாயமான காரணங்களுக்காக நீங்கள் கோபப்படுவதாக இருந்தாலும் அதை அளவோடு நிறுத்திக் கொண்டு, உங்கள் பக்க நியாயத்தை பொறுமையாக வெளிப் படுத்துங்கள். அன்பால் அகிலத்தை வென்ற புத்தரை அடிக்கடி நினைத்துப்பார்த்துக்கொள்ளுங்கள்.
Tags:    

Similar News