செய்திகள்

அமெரிக்காவுக்கு மிரட்டலா? - மாபெரும் போர் ஒத்திகைக்கு தயாராகும் ஈரான்

Published On 2018-12-22 11:20 GMT   |   Update On 2018-12-22 11:20 GMT
அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை கண்டு மனம் தளராத் ஈரான் அரசு ‘பயகம்பர்-இ-ஆசம் என்ற பெயரில் முப்படைகளின் போர் ஒத்திகையை தொடங்கியுள்ளது. #Irandrill #massivedrill
டெஹ்ரான்:

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டில் ஈரானுடன் அணு ஆயுத தடை ஒப்பந்தம் செய்து இருந்தன. அதில் இருந்து மீறிவிட்டதாக புகார் கூறிய அமெரிக்கா கடந்த மே மாதம் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.

மேலும், ஈரான் மீது விலக்கி இருந்த பொருளாதார தடையை மீண்டும் விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.  அமெரிக்காவின் பொருளாதார தடை கடந்த மே மாதத்தில் இருந்து அமலுக்கு வந்தது.

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் படிப்படியாக விலக்கப்பட்ட அனைத்து தடைகளையும் ஈரான் மீது தற்போது டிரம்ப் ஒருசேர திணித்துள்ளார். இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள அத்தனை பொருளாதார தடைகளையும் தகர்த்து பெருமையுடன் முன்னேறி வருவோம் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி இன்று சூளுரைத்துள்ளார்.

இந்நிலையில், நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள குவெஷேம் தீவில் ‘பயகம்பர்-இ-ஆசம் 12’  என்ற பெயரில் முப்படைகளின் மாபெரும் போர் ஒத்திகையை தொடங்கியுள்ளது.

‘முஹம்மது நபி உயர்வானவர்’ என்னும் பொருள்படும் இப்பெயரால் நடைபெற்றுவரும் போர் ஒத்திகையில் ஈரான் நாட்டின் தரைப்படை, விமானப்படை மற்றும் கப்பல்படையை சேர்ந்த வீரர்கள் போர் பயிற்சிகளையும், சாகச ஒத்திகைகளையும் நடத்தி வருகின்றனர். #Irandrill #massivedrill  
Tags:    

Similar News