செய்திகள்
ஓமந்தூரார் பன்னோக்கு அரசு உயர் மருத்துவமனை

ஓமந்தூரார் பன்னோக்கு அரசு உயர் மருத்துவமனை மீண்டும் தலைமை செயலகமாக மாற்றப்படுமா?

Published On 2021-06-09 06:11 GMT   |   Update On 2021-06-09 06:11 GMT
அண்ணா சாலையில் செயல்படும் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவமனைக்காக முழு கட்டமைப்பு இல்லை. இது ஒரு அலுவலகத்துக்கான கட்டமைப்பாகும்.
சென்னை:

கடந்த 2006-2011 தி.மு.க. ஆட்சி காலத்தில் அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலகத்தை ரூ.650 கோடி செலவில் உருவாக்கினார்.

இந்த கட்டிடம் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கால் திறந்து வைக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.



இந்த புதிய தலைமை செயலக கட்டிடத்தில் 2 முறை சட்டசபை கூட்டத்தொடர்களும் நடத்தப்பட்டன.

அதன் பிறகு 2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆனதும் புதிய தலைமை செயலக கட்டிடத்தை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றினார்.

சட்டசபை மீண்டும் ஜெயின் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக கோட்டையில்தான் சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வந்தது.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சட்டசபை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.

தொடர்ந்து இப்போது வரை கலைவாணர் அரங்கில்தான் சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.250 கோடி செலவில் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று தமிழக அரசு சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது.

ஏற்கனவே அந்த வளாகத்தில் பல்வேறு வசதிகளுடன் ஆஸ்பத்திரி செயல்பட்டு வரும் நிலையில் தற்போது பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அங்கு கொண்டு வரப்பட உள்ளதால் அண்ணா சாலையில் செயல்பட்டு வரும் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கிண்டிக்கு மாற்ற வாய்ப்பு உள்ளதாகவும், அண்ணாசாலையில் உள்ள பன்னோக்கு ஆஸ்பத்திரி மீண்டும் தலைமை செயலகமாகவும், சட்டசபை அரங்கமாகவும் மாற்றப்படும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “அண்ணா சாலையில் செயல்படும் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவமனைக்காக முழு கட்டமைப்பு இல்லை. இது ஒரு அலுவலகத்துக்கான கட்டமைப்பாகும். மற்ற அரசு மருத்துவமனைகளை விட மிகவும் குறைவான நோயாளிகளுக்கே இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.



ஆனாலும் பராமரிப்பு செலவுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டி உள்ளது. கிண்டியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமையும் பட்சத்தில் ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இங்கு மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் இதுபற்றி அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்த வி‌ஷயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால்தான் முடிவு எடுக்க இயலும் என்றும் தெரிவித்தனர்.
Tags:    

Similar News