உள்ளூர் செய்திகள்
எய்ட்ஸ் நோயாளிகளை குற்றவாளிகள் போல் பார்க்க கூடாது - கலெக்டர் அருண்தம்புராஜ் பேச்சு
நாகையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எய்ட்ஸ் நோயாளிகளை குற்றவாளிகள் போல் பார்க்க கூடாது என கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இணை இயக்குனர் (காசநோய்) ராஜா வரவேற்றார். இதில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
எய்ட்ஸ் எனப்படும் பால்வினை நோய் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பாதுகாப்பற்ற உடலுறவால் பரவுகிறது. இதை தவிர பரிசோதனை செய்யப்படாத ரத்தம் செலுத்துவதன் வாயிலாகவும் பரவுகிறது.
எனவே எய்ட்ஸ் நோய் என்றால் என்ன என்று கூட தெரியாதவர்களுக்கு சில காரணங்களால் பரவுகிறது. எனவே எய்ட்ஸ் நோயாளிகளை குற்றவாளிகள் போல் பார்க்க கூடாது. அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.
இந்த நோய் குறித்து அனைத்து மருத்துவமனைகளிலும் ஆலோசனை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு சாதாரணமான முறையில் பரவாது. கருவுற்ற காலத்தில் இருந்து தாய்மார்கள் குழந்தை பெற்ற பின் ஒன்றரை ஆண்டுகள் தாய்சேய் நல பதிவேட்டில் அனைத்து தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும்.
ஏ.ஆர்.டி. எனப்படும் கூட்டு மருந்து சிகிச்சை மூலம் எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி. கிருமி இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். முடிவில் திட்ட இயக்குனர் சக்திவேல் நன்றி கூறினார்.