செய்திகள்
வரி நிலுவைக்காக வங்கி கணக்கு முடக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்-அமைச்சரிடம் வலியுறுத்தல்
கொரோனாவால் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் வரி நிலுவைக்காக வங்கி கணக்கு முடக்கும் நடவடிக்கையை கைவிடவேண்டும்.
திருப்பூர்:
வணிகர் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் கோவையில் நடந்தது. இதில் திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் அமைச்சரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதிய சரக்கு மற்றும் சேவை வரி பதிவு சான்றிதழ் பெற இணையதள விண்ணப்பத்தில் கள ஆய்வில் உள்ள பிரச்சி னைகளை களைய வேண்டும். ஜி.எஸ்.டி., சட்டம் 2017ல், ஐ.டி.சி., 04 படிவம் தாக்கல் செய்வதிலிருந்து 2 ஆண்டு விலக்கு அளிக்கப்பட்டது. இதனை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவேண்டும். கொரோனாவால் குறு, சிறு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, ஜி.எஸ்.டி.,யில் பதிவு செய்த வர்த்தகர்கள், மாதாந்திர கணக்கை குறைந்தபட்ச அபராத தொகையுடன் தாக்கல் செய்ய வழங்கப்பட்டிருக்கும் கால அவகாசத்தை, வரும் மார்ச் 2022 வரை நீட்டிக்கவேண்டும். கொரோனாவால் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் வரி நிலுவைக்காக வங்கி கணக்கு முடக்கும் நடவடிக்கையை கைவிடவேண்டும்.
திருப்பூர் வருவாய் மாவட்ட பகுதிகளை இணைத்து புதிதாக திருப்பூர் வணிக வரி கோட்டம் உருவாக்கவேண்டும். திருப்பூர்-அவிநாசி ரோடு, குமார் நகரில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் ஒருங்கிணைந்த வணிக வரி வளாகம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.