செய்திகள்
கைதான உதவி இயக்குனரின் வங்கி லாக்கரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை காணலாம்.

லஞ்ச வழக்கில் கைதான அரசு அதிகாரியின் வங்கி லாக்கரில் இருந்து ரூ.3½ கோடி பறிமுதல்

Published On 2021-03-13 03:05 GMT   |   Update On 2021-03-13 03:05 GMT
லஞ்ச வழக்கில் கைதான தஞ்சை நகர ஊரமைப்பு உதவி இயக்குனரின் வங்கி லாக்கரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்ததில் ரூ.3½ கோடியை பறிமுதல் செய்தனர். மேலும் 1.38 கிலோ தங்கத்தை முடக்கி வைத்தனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்தவர் ஆனந்த். தொழிலதிபர். இவர் தனக்கு சொந்தமான காலி மனையில் வணிக வளாகம் கட்டுவதற்காக கட்டிட திட்ட அனுமதி கேட்டு தஞ்சை மேரீஸ் கார்னர் பகுதியில் உள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு திட்ட அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

அங்கு உதவி இயக்குனராக இருந்த நாகேஸ்வரன் (வயது 52), கட்டிட திட்ட அனுமதி வழங்க ஆனந்திடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் கைது செய்யப்பட்ட நாகேஸ்வரனை கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகேஸ்வரன் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில், நாகேஸ்வரனின் 3 வீடுகள் மற்றும் திருவானைக்காவல், திருவெறும்பூர் ஆகிய பகுதியில் உள்ள வங்கிகளில் உள்ள 3 லாக்கர்களில் அவரது பெயரிலும், அவரது மனைவி, மகன், மகள் பெயர்களிலும் உள்ள 9 வங்கி கணக்குகள், நிரந்தர வைப்புகள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து விசாரணை நடத்தினர்.

இதில், 3 வீடுகளில் இருந்து ரூ.14 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கமும், 3 வங்கி லாக்கர்களில் இருந்து ரூ.2 கோடியே 12 லட்சத்து 89 ஆயிரமும், வங்கி சேமிப்பு கணக்குகளில் ரூ.1 கோடியே 12 லட்சமும், நிரந்தர வைப்புகளில் ரூ.23 லட்சத்து 59 ஆயிரமும், வீடுகள், வங்கிகளில் 1.38 கிலோ தங்க நகைகளும் இருப்பது தெரிய வந்தது.

இதில், தங்க நகைகளின் இன்றைய மதிப்பு ரூ.58 லட்சத்து 9 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இவற்றில் ரூ.3 கோடியே 39 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 1.38 கிலோ தங்க நகைகள் வங்கி லாக்கரில் முடக்கி வைக்கப்பட்டது.
Tags:    

Similar News