லைஃப்ஸ்டைல்
நுரையீரலை பாதிக்கும் கொரோனா

கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் நுரையீரலுக்கு என்ன ஆகிறது...?

Published On 2020-03-27 09:23 GMT   |   Update On 2020-03-27 09:23 GMT
மூக்கு, வாய் வழியாக மனித உடலுக்குள் நுழையும் கொரோனா வைரஸ் செல்கள் வழியாக நுரையீரல் சென்று அங்கு அடைக்காத்து தன்னுடைய எண்ணிக்கையை வலுப்படுத்துகிறது. பின்னர், ஒவ்வொரு உறுப்புகளுக்கும் சென்று அவற்றை செயல் இழக்க செய்து உயிரை பறிக்கிறது.
மனிதன் உயிர் வாழ்வதற்கு காற்று எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியமானது காற்றை பிரித்து உடல் இயக்க செயலுக்கு முக்கிய பங்கு வகிக்கும் நுரையீரல். நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு சுவாசக் குழாயின் வழியே நுரையீரலுக்குள் செல்கிறது. அங்கு காற்றிலிருந்து ஆக்சிஜனை மட்டும் பிரித்து எடுத்து, ரத்த அணுக்களுடன் சேர்த்து நல்ல ரத்தமாக மாற்றும் முக்கியமான பணியை நுரையீரல் செய்கிறது.

இதயத்திலிருந்து தொடங்கி உடல் முழுவதுக்கும் பயணம் செய்துவிட்டு வரும் கெட்ட ரத்தத்தை ஆஜ்சிஜன் துணை கொண்டு சுத்திகரித்து நல்ல ரத்தமாக மாற்றி மீண்டும் இதயம் வழியாக உடல் முழுவதற்கும் அனுப்பும் முக்கியமான பணியை மேற்கொள்கிறது. இப்போதே உடல் உறுப்புகளில் நுரையீரல் எவ்வளவு முக்கியமானது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

இத்தகைய பணியை செய்யும் நுரையீரலைதான் கொரோனா வைரஸ் தன்னுடைய இலக்காக கொண்டிருக்கிறது. மூக்கு, வாய் வழியாக மனித உடலுக்குள் நுழையும் கொரோனா வைரஸ் செல்கள் வழியாக நுரையீரல் சென்று அங்கு அடைக்காத்து தன்னுடைய எண்ணிக்கையை வலுப்படுத்துகிறது. பின்னர், ஒவ்வொரு உறுப்புகளுக்கும் சென்று அவற்றை செயல் இழக்க செய்து உயிரை பறிக்கிறது.

நுரையீரல் பாதிக்கப்படுவது தொடர்பாக பேசிய ஆஸ்திரேலியாவின் ராயல் ஆஸ்ட்ரலேசியன் மருத்துவ கல்லூரியின் தலைவரும், சுவாசப்பிரிவு மருத்துவருமான பேராசிரியர் ஜான் வில்சன் கொரோனா வைரசின் பாதிப்பின் கடுமையான விளைவுகளை நான்கு நிலைகளாக பிரிக்கிறார்.

* முதல்கட்டமாக வைரஸ் பாதிப்பு இருக்கும், ஆனால் அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு தொடர்பாக பெரியதாக எந்த ஒரு அறிகுறியும் காணப்படாது.

* இரண்டாவது கட்டம் மேல் சுவாசக் குழாயில் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படுவது. பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு காய்ச்சல், இருமல், தலைவலி இருப்பதாக லேசான அறிகுறிகள் இருக்கலாம். இதுபோன்ற சிறிய அறிகுறிகளை கொண்டவர்கள் இன்னும் வைரஸை பரப்ப முடிகிறது. ஏனென்றால், அவர்கள் வைரஸ் பாதிப்பு இருப்பதை அறிந்திருக்க மாட்டார்கள்.

* மூன்றாவது கட்டம் வைரஸ் பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவமனைக்கு செல்லும்போது, இதேபோன்ற அறிகுறிகளை கொண்ட ‘புளு’ காய்ச்சலாக தெரிகிறது.

* நான்காவது கட்டம் நிமோனியாவை கொண்ட கடுமையான நோய் பாதிப்பு ஏற்படும் என அவர் கூறியுள்ளார். சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவ உதவியை நாடியவர்களில் சுமார் 6 சதவீதம் பேர் இதுபோன்ற கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடுகிறார்.

கொரோனா வைரஸ் வயதானவர்கள், உயர் இரத்த அழுத்தம், இதயம் நுரையீரல் பிரச்சினைகள் கொண்டவர்கள் அல்லது நீரிழிவு போன்ற அடிப்படை பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜான் வில்சன் பாதிப்பு தொடர்பாக கூறுகையில், கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருமல் மற்றும் காய்ச்சல் உருவாவது, பாதிப்பு சுவாச மரத்தை (காற்றை உள்ளே இழுக்கும் மூச்சு குழாய் நுரையீரல் வரையில் தலைகீழா கிளைகளுடன் ஒரு மரம் போன்ற அமைப்பை கொண்டிருக்கும்.) அடைந்துவிட்டது என்பதற்கான விளைவாகும். சுவாசப்பாதை நுரையீரலுக்கும் வெளிப்புறத்திற்கும் இடையில் காற்று பயணம் செய்வதாகும். சுவாசப்பாதையில் பாதிப்பு ஏற்பட்டு வீக்கம் ஏற்படுகிறது. இது காற்றுப்பாதையில் இருக்கும் நரம்புக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. அப்போது சிறு துகளால் கூட இருமல் ஏற்படும்.

வைரஸ் பாதிப்பு சுவாசப்பாதையிலிருந்து நுரையீரல் உள்ளே செல்லும் போது, வாயு பரிமாற்ற மையத்திற்கு செல்கிறது. இதனால், வாயு பரிமாற்றம் தடையை சந்திக்கிறது. பின்னர் நுரையீரலின் அடிப்பகுதியில் இருக்கும் காற்று சுத்திகரிப்பு உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சுத்திகரிப்பு பகுதியில் காளான்கள் போன்ற வீக்கம் ஏற்படுகிறது. பின்னர் நிமோனியா ஏற்படுகிறது. வைரசினால் பாதிக்கப்பட்ட நுரையீரலின் ஆக்சிஜனை எடுத்து ரத்தத்தை சுத்தம் செய்யும் பணி குறையும். இதனையடுத்து கடுமையான நிமோனியாவுடன் மரணம் ஏற்படுகிறது, இதுவே வழக்கமான நிகழ்வாக இருக்கிறது என்கிறார்.

நிமோனியாவிற்கு சிகிச்சை எவ்வாறு அளிக்கப்படுகிறது?

ஆஸ்திரேலியா நுரையீரல் அறக்கட்டளையின் தலைவரும், முன்னணி சுவாசப்பிரிவு மருத்துவருமான பேராசிரியர் கிறிஸ்டின் ஜென்கின்ஸ் பேசுகையில், துரதிர்ஷ்டவசமாக கொரோனா வைரசினால் ஏற்படும் நிமோனியாவை தடுக்கக்கூடிய வகையில் எந்த ஒரு சிகிச்சையும் இதுவரை இல்லை. ஏற்கனவே, எல்லா வகையான மருந்துகளையும் முயற்சித்து வருகின்றனர். பலவிதமான வைரஸ் மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் பயனுள்ளதாக இருக்கும் என்பதை கண்டுபிடிப்போம் என நம்புகிறோம்.

இந்த நேரத்தில் ஏற்கனவே இருக்கும் சிகிச்சை முறையையே (மேலும், பாதிப்பு ஏற்படாத வகையில் உதவி செய்யும் மருந்துகளை கொண்டு மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கை )மேற்கொள்கிறோம். வேறு எந்த பிரத்யேக சிகிச்சையும் கைவசம் இல்லை. இதுதான் நாங்கள் தீவிர சிகிச்சையில் இருக்கும் மக்களுக்கு வழங்குகிறோம்.

சுவாசக்கருவியின் மூலமாக அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்படும். அவர்களுடைய ஆக்சிஜன் அளவை பராமரிக்கிறோம், குணமடையும் போது அவர்களின் நுரையீரல் மீண்டும் இயல்பான வழியில் செயல்பட முடியும் எனக் கூறியுள்ளார்.

மருத்துவர் ஜான் வில்சன் பேசுகையில், கொரோனா வைரஸ் நிமோனியா நோயாளிகளுக்கு இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, அவர்களுக்கு வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும். சில சூழ்நிலைகளில் இதுமட்டும் போதுமானதாக இருக்காது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிமோனியா ஏற்பட்டால், அது தடையின்றி தொடரும். பாதிக்கப்பட்ட நோயாளிகள் உயிர் பிழைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் நிமோனியா எவ்வாறு மாறுபடுகிறது? என்ற கேள்விக்கு மருத்துவர் கிறிஸ்டின் ஜென்கின்ஸ் பதில் அளிக்கையில், எங்களுக்கு தெரிந்த பெரும்பாலான நிமோனியா பாதிப்புக்கு மருத்துவமனையில் அனுமதிப்போம். ஆண்டிபயாடிக் மருந்துகள் மூலம் சிகிச்சைக்கு பலன் கிடைக்கிறது. ஆனால், கொரோனா வைரசினால் ஏற்படும் நிமோனியா மாறுபட்டதாக இருக்கிறது என்கிறார்.

மருத்துவர் வில்சன் பேசுகையிலும், கொரோனாவினால் ஏற்படும் நிமோனியா கடுமையானதாக இருக்கலாம் என்பதற்கு சான்றுகள் இருக்கிறது. கொரோனா வைரசினால் ஏற்படும் நிமோனியா சிறிய பகுதிகளுக்கு பதிலாக நுரையீரலின் அனைத்து பகுதியையும் பாதிக்கும் எனக் கூறுகிறார். நிமோனியாவால் இறக்கும் அபாயத்திற்கு முக்கிய காரணியாக வயது மூப்பும், இதயம், சிறுநீரகம் பாதிப்பு உள்ளிட்டவையும் காரணமாக உள்ளது எனக் கூறுகிறார்கள். கொரோனா வைரசிடம் இருந்து நம்மை காத்துக்கொள்ள தடுப்பு நடவடிக்கை மட்டுமே உள்ளது. எனவே, அரசின் அறிவுரைகளை ஏற்று சுய விலகியிருத்தலை கடைபிடிப்போம், ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்.

Tags:    

Similar News