செய்திகள்
பலியான வீரமணி

கண்டமங்கலம் அருகே வெள்ளத்தில் சிக்கி தொழிலாளி பலி

Published On 2021-11-20 07:08 GMT   |   Update On 2021-11-20 07:08 GMT
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே ஏரிக்கு செல்லும் ஓடை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கண்டமங்கலம்:

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளி நேலியனூர் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 46). தொழிலாளி.

சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதாக கூறிச்சென்ற வீரமணி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் வீரமணியை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் இன்று காலை ஆழியூர் ஏரிக்கு செல்லும் ஓடையில் வீரமணி இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் . அந்தப் பகுதியில் இறந்து கிடந்த வீரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ஏரிக்கு செல்லும் ஓடை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு வீரமணி இறந்திருப்பது தெரியவந்தது.

கண்டமங்கலம் அருகே உள்ள கொங்கம்பட்டு பூந்தோட்ட தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (36). சம்பவத்தன்று இவர் வீட்டிற்கு அருகில் உள்ள மலட்டாறு பகுதிக்குச் சென்றார்.

அப்போது ஆற்று வெள்ளத்தில் சங்கர் அடித்துச் செல்லப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ‌

கடந்த சில தினங்களாக அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை சங்கரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து தேடுதல் பணி நடந்து வருகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News