செய்திகள்
தீ விபத்து

ர‌ஷியாவில் மரக்கட்டிடம் எரிந்து 11 பேர் பலி

Published On 2020-01-21 19:45 GMT   |   Update On 2020-01-21 19:45 GMT
ர‌ஷியாவின் பிரிச்சுலிம்ஸ்கி கிராமத்தில் மரக்கட்டிடம் திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் தீயில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மாஸ்கோ:

ர‌ஷியாவின் டாம்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பிரிச்சுலிம்ஸ்கி கிராமத்தில் இருந்த ஒரு மரக்கட்டிடம் நேற்று அதிகாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த கட்டிடம் முழுவதும் மரத்தினாலேயே கட்டப்பட்டு இருந்ததால், தீ வேகமாக பரவியது. கட்டிடத்தில் இருந்தவர்கள் அலறி துடித்தனர். தீயணைப்பு வீரர்களின் நீண்டநேர முயற்சிக்கு பின்னர் அங்கிருந்து 2 பேரை மட்டுமே உயிருடன் காப்பாற்ற முடிந்தது. 11 பேர் தீயில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கரிக்கட்டையாக கிடந்த அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த தீவிபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. யாரேனும் அந்த கட்டிடத்துக்கு தீ வைத்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. விபத்தில் உயிர் இழந்த அனைவரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News