செய்திகள்
கேரளாவில் படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு- இன்று 15,058 பேருக்கு தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திரிச்சூர் மாவட்டத்தில் 2,158 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், கேரளாவில் தினசரி பாதிப்பு அதிக அளவிலேயே பதிவானது. கடந்த சில தினங்களாக புதிய தொற்று எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டி பதிவான நிலையில், தற்போது குறையத் தொடங்கி உள்ளது. நேற்று 20 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 91,885 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டதில், 15,058 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு விகிதம் 16.39 சதவீதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திரிச்சூர் மாவட்டத்தில் 2,158 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோழிக்கோட்டில் 1800, எர்ணாகுளத்தில் 1694, திருவனந்தபுரத்தில் 1387, கொல்லத்தில் 1216, மலப்புரத்தில் 1199, பாலக்காட்டில் 1124, ஆலப்புழாவில் 1118 மற்றும் கோட்டயத்தில் 1027 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் 99 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,650 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 28,439 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 2,08,773 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.