செய்திகள்
சென்னையில் கனமழை- நகரில் பல சாலைகள் சேதம்
சென்னையில் 28-ந்தேதி நள்ளிரவு முதல் விடிய விடிய பெய்த கனமழையால் நகரில் பல சாலைகள் கற்கள் பெயர்ந்து சேதம் அடைந்துள்ளன.
சென்னை:
சென்னையில் 28-ந்தேதி நள்ளிரவு முதல் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக முக்கிய சாலைகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் மழைநீரில் தத்தளித்து சென்றன.
சாலைகளில் தேங்கியிருந்த மழைநீர் அன்றைய நாள் மாலையே முழுவதுமாக வடிந்துவிட்டது. ஆனால் கனமழை காரணமாக நகரின் பல சாலைகளில் கற்கள் பெயர்ந்து சேதம் அடைந்துள்ளன. அண்ணாசாலை ஜி.பி.ரோடு, எழும்பூர் மாண்டியத் சாலை, பேசின்பிரிட்ஜ் சாலை, லேங்க்ஸ் கார்டன் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் பலவற்றில் சாலைகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், “மழை காரணமாக சாலைகள் சேதமடைந்த நிலையில் மோசமாக காட்சியளிக்கிறது. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.