செய்திகள்
சாலையோரம் எரிக்கப்படும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் அவதி
சாலையோரம் கொட்டப்பட்டு எரிக்கப்படும் குப்பைகளால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். ஆகவே குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர்:
கரூர் நகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு என்.எஸ்.கே நகர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் தேங்கும் கழிவு பொருட்கள் மற்றும் உடைந்த ஓடுகள், பிளாஸ்டிக் கழிவுகள், பாய்கள், இறைச்சி கழிவுகள் ஆகியவை என்.எஸ்.கே. நகரில் இருந்து அருகம்பாளையம் செல்லும் சாலையோரம் கொட்டப்படுகின்றன.
இந்த கழிவு பொருட்களை நாய்கள், மாடுகள் கிளறி தின்கின்றன. இதனால், அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்படுகிறது. மேலும், அந்த குப்பகைள் தீ வைத்து எரிக்கப்படுவதால் புகைமூட்டம் ஏற்பட்டு அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். ஆகவே, இப்பகுதியில் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல, கரூர் மாவட்டம் நடையனூர் பகுதியில் உள்ள மளிகைக் கடைகள், திருமண மண்டபங்களில் அழுகும் காய்கறிகள் மற்றும் டீக்கடைகளில் குவியும் பிளாஸ்டிக் கப்புகள், கவர்கள், மீதமாகும் பலகாரங்கள், அப்பகுதியில் குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பைகள் ஆகியவை அப்பகுதியில் சாலையோரம் கொட்டப்படுகிறது. இதனால், சுகாதாரகேட்டு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகவே, இங்கு கழிவு பொருட்கள் மற்றும் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.