செய்திகள்
ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு- 7 பேர் பலி
அமெரிக்க படையினரை முழுவதுமாக திரும்ப பெறும் நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில், வன்முறை அதிகரித்து பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
காபூல்:
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இன்று இரண்டு பேருந்துகளை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நகரின் மேற்கு பகுதியில் மைனாரிட்டி ஹசாரா சமுதாயத்தினர் அதிகம் வாழும் பகுதியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இதில் 7 பேர் உயிரிழந்ததாகவும், 6 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஆப்கானிஸ்தானில் பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது. தலிபான் பயங்கரவாதிகள் புதிய பகுதிகளை பிடிப்பதற்கும், சோதனைச் சாவடிகளை தாக்குவதிலும் கவனம் செலுத்துவதால் அரசுப் படைகளுடனான மோதல் சமீபகாலமாக தீவிரமடைந்துள்ளது. பொதுமக்களை குறிவைத்தும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க படையினரை முழுவதுமாக திரும்ப பெறும் நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில், வன்முறை அதிகரித்து பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. செப்டம்பர் 11ம் தேதிக்குள் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு படைகள் விலக உள்ளன. அதேசமயம், ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் அமைப்புக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளும் குறைந்துவிட்டன.