ஆன்மிகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீப விழா: தேரோட்டம், கிரிவலம் ரத்து

Published On 2021-11-06 07:25 GMT   |   Update On 2021-11-06 07:27 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப விழாவையொட்டி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த 10 ஆயிரம் பக்தர்களுக்கு தினசரி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகாவிழா உலக பிரசித்திப் பெற்றது. இந்த திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு தொடங்குகிறது.

காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மனின் உற்சவம் நடைபெற உள்ளது. பின்னர், 8-ந் தேதி சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் உற்சவமும், 9-ந்தேதி வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் மற்றும் ரி‌ஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெற உள்ளது.

இதையடுத்து, அருணாசலேஸ்வரர் கோவிலில் மூலவர் சன்னதிமுன்பு உள்ள தங்க கொடிமரத்தில் வரும் 10-ந்தேதி காலை 6.30 மணிமுதல் 7.25 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது.

இதைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற கூடிய விநாயகர், சந்திரசேகரர் மற்றும் பஞ்சமூர்த்திகளின் உற்சவம் ஆரம்பமாகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 19-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர்சன்னதியில் பரணி தீபமும் மற்றும் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

அண்ணாமலை உச்சியில் ஜோதி வடிவமாக அருணாசலேஸ்வரர் காட்சி கொடுப்பதால், கோவில் மூலவர் சன்னதியின் நடை அடைக்கப்படும். பின்னர், மறுநாள் அதிகாலை வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

மகா தீபம் ஏற்றப்படுவதற்கு முன்பாக ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அர்த்தநாரீஸ்வரர் காட்சி தரும் நிகழ்வு நடைபெறும்.

இதையடுத்து அய்யங்குளத்தில் 3 நாட்கள் நடைபெறும் தெப்பஉற்சவம் 20-ந்தேதி தொடங்குகிறது. பின்னர் 23-ந்தேதி வெள்ளி ரி‌ஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் 17 நாட்கள் நடைபெறும் கார்த்திகை மகாதீப விழா நிறைவு பெற உள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகாதீபவிழா நாட்களில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

7-ந்தேதி முதல் 17-ந்தேதி வரையும் மற்றும் 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசிக்கலாம். 17-ந்தேதி பிற்பகல் 1 மணி முதல் 20-ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை. தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் நடைபெறும் சுவாமிகளின் உற்சவம், ஆகம விதி களின்படி கோவில் வளாகத்தில் கடந்தாண்டை போல் இந்தாண்டு நடைபெறும்.

அதேபோல், மாட வீதியில் நடைபெறும் மகா தேரோட்டம், இந்தாண்டும் நடைபெறாது. அதற்கு மாற்றாக, கோவில் வளாகத்தில் உள்ள 5ம் பிரகாரத்தில் சாமிகளின் உலா நடைபெறும்.

மகா தீபம் ஏற்றப்படும் அண்ணாமலை மீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்ய 19-ந்தேதி முதல் 11 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அய்யங்குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரி, கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நடைபெறும்.

தீபத் திருவிழா நடைபெறும் 17 நாட்களுக்கு திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் அன்னதானம் வழங்க அனுமதி இல்லை. சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படாது.

ஆண்டுதோறும் நடைபெறும் குதிரை சந்தை மற்றும் மாட்டு சந்தைக்கும் அனுமதி இல்லை. பவுர்ணமி மற்றும் மகா தீபத் திருநாள் என 17-ந்தேதி பிற்பகல் 1 மணி முதல் 20-ந்தேதி வரை கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப விழாவையொட்டி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த 10 ஆயிரம் பக்தர்களுக்கு தினசரி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

அவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். www.arunacha leswarartemple.tnhrce.in என்ற இணையதளத்தில் இலவச தரிசனத்துக்கான முன் பதிவு இன்று தொடங்கியது. ஆன்லைனில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 3 ஆயிரம் உள்ளூர் பக்தர்களுக்கான அனுமதி சீட்டு, சிறப்பு மையங்கள் மூலம் நேரடியாக வழங்கப்படும். தீபத் திருவிழா நாட்களில் கட்டளைதாரர்கள் மற்றும் உபய தாரர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
Tags:    

Similar News