செய்திகள்
விபத்து

புதுவையில் 2019-ம் ஆண்டில் சாலை விபத்தில் 156 பலி- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Published On 2020-09-28 10:54 GMT   |   Update On 2020-09-28 10:54 GMT
புதுவையில் 2019-ம் ஆண்டில் சாலை விபத்தில் 156 பலியானதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி:

இந்தியாவில் உள்ள 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விபத்துகள் குறித்து தேசிய அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை விட புதுவையில் விபத்துகளில் இறப்போர் அதிகம் என முடிவுகள் வந்துள்ளது. தேசிய சராசரியாக ஒரு லட்சம் பேருக்கு 31.5 பேர் இறக்கும் நிலையில் புதுவையில் ஒரு லட்சம் பேரில் 72.8 பேர் விபத்தில் இறக்கின்றனர்.

தமிழகத்தில் இது 29.6 ஆக உள்ளது. புதுவையில் 2019-ம் ஆண்டில் ஆயிரத்து 103 ஆண்கள், 144 பெண்கள் விபத்தில் இறந்துள்ளனர். ஆயிரத்து 619 பேர் காயமடைந்துள்ளனர்.

இது 2018-ம் ஆண்டை விட 9 சதவீதம் குறைவு. இருப்பினும் தேசிய சராசரியை விட இருமடங் காக நீடித்து வருகிறது. பெரும்பாலான விபத்துகள் அதிவேகத்தால் ஏற்படுகிறது. காயமடைவோர் எண்ணிக்கை அதிகரிக்க மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவதே காரணம் என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுவையில் சாலை, ரெயில் விபத்தில் 156 பேர் (136 ஆண்கள், 20 பெண்கள்) இறந்துள்ளனர். புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் எவ்வித பாதுகாப்புமின்றி கடலில் குளிப்பதால் நீரில் மூழ்கி இறக்கின்றனர்.

இதுபோல் புதுவையில் 51 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். 15 பேர் மின்சாரம் தாக்கியும், 6 பேர் கீழே விழுந்தும், 81 பேர் திடீர் நெஞ்சுவலியாலும் இறந்துள்ளனர். 24 பேர் வி‌ஷத்தால் இறந்துள்ளனர். அதிகபட்சமாக 770 பேர் அடையாளம் தெரியாத காரணங்களால் இறந்துள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய சராசரியை விட புதுவையில் இறப்பு அதிகரிக்க இதுவே காரணம்.

புதுவையில் பல்வேறு இடங்களில் இருந்து குடும்பத்தினரால் கைவிடப்பட்டோர் கோவில், சுற்றுலா தலங்களில் பிச்சை எடுத்து வாழ்கின்றனர். இவர்களின் இறப்பும், சந்தேக மரணம் ஆகியவையும் 174 சந்தேக மரணம் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இதனால் நாட்டிலேயே புதுவையில்தான் இறப்பு அதிகம் என ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News