ஆன்மிகம்
முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் பக்தர்கள்.

கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் இன்று புனித நீராடினர்

Published On 2021-02-11 07:36 GMT   |   Update On 2021-02-11 07:36 GMT
கொரோனா ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தை அமாவாசையையொட்டி இன்று கன்னியாகுமரி கடலில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்துக்களின் முக்கிய விசே‌ஷ நாட்களில் தை அமாவாசையும் ஒன்று இந்த நாளில் இந்துக்கள் அதிகாலையிலேயே எழுந்து கடல், நதி போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டு தை அமாவாசை விழா இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆடி அமாவாசை அன்று கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராட தடைவிதிக்கப்பட்டது. இப்போது கொரோனா ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தை அமாவாசையையொட்டி இன்று கன்னியாகுமரி கடலில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 4 மணியிலிருந்து பக்தர்கள் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடல் பகுதியில் புனித நீராடி ஈரத்துணியுடன் வந்து கடற்கரையில் அமர்ந்து இருந்த வேத மந்திர ஓதுவார்கள் மற்றும் புரோகிதர்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து வாழை இலையில் பச்சரிசி, எள்ளு ,பூ, தர்ப்பை புல் மற்றும் புனித நீர் ஊற்றி பலிகர்ம பூஜை செய்தார்கள். அதன் பிறகு அந்த பூஜை செய்த பொருட்களை இலையில் வைத்து தலையில் சுமந்து கொண்டு சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் புனித நீராடினார்கள்.

அதன் பிறகு கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்கள். தை அமாவாசையையொட்டி பகவதி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் மூலஸ்தான நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும்,விஸ்வரூதரிசனமும்நடந்தது.
Tags:    

Similar News