ஆன்மிகம்
தெப்ப திருவிழாவையொட்டி தெப்பக்குளத்தில் தெப்பம் கட்டும் பணி நடைபெற்ற போது எடுத்த படம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 22-ந்தேதி மாசி தெப்ப உற்சவம்

Published On 2021-02-15 09:06 GMT   |   Update On 2021-02-15 09:06 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருகிற 22-ந்தேதி மாசி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இதற்காக மேலவாசலில் உள்ள தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்ப திருவிழா நாளை (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 23-ந்தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவின் முதல் நாள் ஹம்ச வாகனத்திலும், 2-ம் நாள் ஹனுமந்த வாகனத்திலும், 3-ம் நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

4-ம் நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5-ம் நாள் இரட்டை பிரபை வாகனத்திலும், 6-ம் நாள் யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தெப்பத்திருவிழாவின் 7-ம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விழாவின் 8-ம் நாளான 22-ந்தேதி மாலை நடைபெறுகிறது. இதையொட்டி அன்று மாலை 3 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு வந்து சேருகிறார். அன்று இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

9-ம் திருநாளான 23-ந் தேதி பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார்.

பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.

மாசி தெப்ப திருவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் மேலவாசலில் உள்ள 5½ ஏக்கர் பரப்பளவு கொண்ட தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இருந்து வாய்க்கால் மூலமாக தெப்ப குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News