ஆன்மிகம்
விறகு விற்று லீலை நிகழ்த்திய சுவாமி

ஆவணி மூலத்திருவிழா: விறகு விற்று லீலை நிகழ்த்திய சுவாமி

Published On 2021-08-21 06:58 GMT   |   Update On 2021-08-21 06:58 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் சுவாமி தங்க சப்பரம், அம்மன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று விறகு விற்ற திருவிளையாடல் லீலை நடந்தது. அதில் சுந்தரேசுவரர் விறகு விற்ற லீலையை பட்டர்கள் நடித்து காண்பித்தனர். அதை தொடர்ந்து சுவாமி தங்க சப்பரம், அம்மன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.

விறகு விற்ற திருவிளையாடல் புராண வரலாறு வருமாறு:-

வரகுண பாண்டியன் ஆட்சி காலத்தில் ஏமநாதன் என்னும் புலவன் பாண்டிய நாட்டிற்கு வந்தான். யாழ் வாசிப்பதில் வல்லவனான அவன் அரசன் முன் யாழ் மீட்டினான். யாழிசையில் மயங்கிய அரசன் ஏமநாதனை பாராட்டினான். ஏமநாதனும், அவனது சீடர்களும் மிகவும் செருக்கடைந்தார்கள். பாண்டிய நாட்டில் என்னுடன் போட்டியிட யாராவது உள்ளார்களா? என ஆணவத்துடன் சவால் விட்டான். அவனை எதிர்த்து யாரும் போட்டியிட முன்வராத காரணத்தால், பாண்டிய மன்னன் அரசவை ஆஸ்தான வித்துவானான பாணபத்திரனை அழைத்து ஏமநாதனுடன் போட்டியிட பணித்தார். தெருவெங்கும் ஏமநாதன் சீடர் களின் யாழிசையை கேட்ட பாணபத்திரன் ஏமநாதனை வெல்லும் வழியறியாமல் சோமசுந்தரரை வேண்டி நின்றார்.

இறைவனும் ஒரு முதியவர் உருவம் கொண்டு விறகு விற்பவராக ஒரு யாழை எடுத்து கொண்டு ஏமநாதன் தங்கியிருந்த வீட்டுத் திண்ணையில் அமர்ந்து யாழினை வாசித்து கொண்டே பாடினார். அந்த தெய்வ கானத்தை கேட்ட ஏமநாதன் வெளியே வந்து விறகு விற்பவரை நீ யார் என்று வினவ, அவரும் பாணபத்திரரால் வயோதிகர் என்று ஒதுக்கப்பட்ட ஆள் என்று கூறினார். ஒதுக்கப்பட்ட ஆளுக்கே இவ்வளவு திறமை என்றால் தன்னால் பாணபத்திரரை வெல்ல முடியாது என அஞ்சிய ஏமநாதன் இரவோடு இரவாக மதுரையை விட்டே சென்றான் என்று வரலாறு கூறுகிறது.

Tags:    

Similar News