செய்திகள்
கோப்புபடம்

தாம்பரத்தில் 2 ஆண்டுகளாக சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லை - 2 வாலிபர்கள் கைது

Published On 2021-04-29 08:12 GMT   |   Update On 2021-04-29 08:12 GMT
தாம்பரத்தில் 2 ஆண்டுகளாக சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம்:

தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தாய் மற்றும் தந்தையுடன் அதே பகுதியில் வசித்து வந்தார்.

இவருடன் தாம்பரத்தை அடுத்த கவுரிவாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் நெருங்கி பழகியுள்ளார். அப்போது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி கார்த்திக் வெளியில் அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த நேரங்களில் சிறுமியை ஏமாற்றி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

கார்த்திக் தனது நண்பர்களான மணிகண்டன் மற்றும் முக்கிய அரசியல் கட்சியை சேர்ந்த தனசேகரன் ஆகியோரிடமும் சிறுமியை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதன் பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக 3 பேரும் சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அப்போது சிறுமியை ஆபாசமாக புகைப்படம் எடுத்ததும் தெரியவந்தது.

சில நேரங்களில் சிறுமிக்கு மது வாங்கி கொடுத்து இந்த கும்பல் குடிக்க வைத்து கொடூரமாக நடந்துள்ளது. இது பற்றி வெளியில் சொன்னால் தாய் மற்றும் சகோதரியை கொன்றுவிடுவோம் என்று 3 பேரும் மிரட்டியுள்ளனர்.

இதனால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி சிறுமி வெளியில் சொல்லாமல் பயத்துடன் இருந்துள்ளார். ஆனால் இந்த வி‌ஷயம் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தெரியவந்துள்ளது.

இதுபற்றி அதே பகுதியைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் ஒருவர் தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து மகளிர் போலீசார் சிறுமியை அழைத்து தனியாக விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை, 3 பேரும் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததை வாக்கு மூலமாக அளித்தார். இதை தொடர்ந்து கார்த்திக், மணிகண்டன், தனசேகரன் ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இவர்களில் கார்த்திக், மணிகண்டன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். கவுரிவாக்கம் பகுதியில் சிவகாமி நகர் அண்ணா தெருவில் கார்த்திக் வசித்து வருகிறார். அதே பகுதியில் காந்திநகர் 4-வது தெருவில் மணிகண்டன் வீடு உள்ளது.

தனசேகரனும் அதே பகுதியைச் சேர்ந்தவர்தான். சிறுமிக்கு நேர்ந்த பாலியல் தொல்லை பற்றி அந்த பகுதியைச் சேர்ந்த சிலரிடமும் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தவழக்கில் அரசியல் பிரமுகரான தனசேகரன் தப்பி ஓடி தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். தனசேகரனை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

தனிப்படை போலீசார் தனசேகரனின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் தகவல்களை சேகரித்து வைத்துள்ளனர். அவரது செல்போன் நம்பரை வைத்து இருக்கும் இடத்தை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வடசென்னை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இன்ஸ்பெக்டர் உள்பட பலர் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டனர். இதே போன்று தாம்பரம் சிறுமி வழக்கிலும் தொடர் புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News