செய்திகள்
துணை முதல் மந்திரி அஜித் பவார்

மகாராஷ்டிராவில் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு - அஜித் பவாருக்கு நிதித்துறை

Published On 2020-01-05 06:44 GMT   |   Update On 2020-01-05 06:44 GMT
மகாராஷ்டிராவில் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. துணை முதல் மந்திரி அஜித் பவாருக்கு நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி அரசு அமைந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாகவும், 3 கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர். 
அதன்பின், ஒரு மாதத்துக்கு பிறகு கடந்த டிசம்பர் 30-ம் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது 3 கட்சிகளைச் சேர்ந்த 36 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

தற்போது மராட்டிய மந்திரிசபையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, துணை முதல்-மந்திரி அஜித்பவார் ஆகியோரை சேர்த்து மொத்தம் 43 மந்திரிகள் உள்ளனர். புதிய மந்திரிகளுக்கு இலாகாக்கள் ஒதுக்குவதில் தாமதம் நீடித்து வந்தது.   

இதற்கிடையே, முதல் மந்திரி உத்தவ் தாக்கரே முன்மொழிந்த இலாகா பட்டியல் ஆளுநரின் ஒப்புதலுக்கு நேற்று மாலை அனுப்பப்பட்டது. ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி இன்று ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் புதிதாக பதவியேற்ற மந்திரிகளுக்கு இன்று இலாகா ஒதுக்கப்பட்டது. அதில், துணை முதல் மந்திரி அஜித் பவாருக்கு நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது. அனில் தேஷ்முக்கிற்கு உள்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாககரேவுக்கு சுற்றுலாத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News